டெல்லி பவுத்த மத மாற்ற சர்ச்சை விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா
டெல்லி: டெல்லியில் இந்துக்களை பவுத்த மதத்துக்கு மதம் மாற்றிய சர்ச்சையில் அடிபட்டதால் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விஜயதசமி நாளன்று டெல்லி டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் இந்துமதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தை தழுவினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் பங்கேற்றார்.

மேலும் நிகழ்ச்சியில் உறுதி மொழியை வாசித்த ராஜேந்திர பால் கவுதம், இந்து கடவுள்களை தாம் நம்புவதில்லை; இந்து கடவுள்களை வணங்குவதில்லை என உறுதி மொழி வாசித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குஜராத் கல்வி அமைச்சர் ஜிது வகானி கூறுகையில் இந்து தெய்வங்களை ஆம் ஆத்மி
அமைச்சர் அவமதித்துவிட்டார் என கூறியிருந்தார். குஜராத் சட்டசபை தேர்தலிலும் இது பெரிய விவகாரமாக எதிரொலித்தது. குஜராத் தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் மதிக்கிறேன். எந்த தெய்வத்தையும் அவமதிக்க வேண்டும் என கனவில் கூட நினைத்தது இல்லை என விளக்கம் அளித்தார் ராஜேந்திர பால் கவுதம். அத்துடன் அனைவரின் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை பற்றியே நான் பேசினேன். ஆனால், பாஜகவினரோ எனக்கு எதிராக பொய்பிரச்சாரங்களை பரப்புகின்றனர். பாஜகவினர் செயல்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. பாஜகவின் இந்த போலி பிரசாரங்களால் வருத்தம் அடைந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறியிருந்தார். தற்போது அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications