அக்கவுண்டில் விழுந்த பல லட்சம் கோடி ரூபாய்.. அம்பானியை ஓவர்டேக் செய்த இளைஞருக்கு பேரதிர்ச்சி
லக்னோ: உத்தர பிரதேசம் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞரின் தாயார் வங்கிக் கணக்கில் ரூ. 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானியின் சொத்து மதிப்பை விட பல லட்சம் கோடி அதிக தொகை அக்கவுண்டில் விழுந்ததால் ஒரு நிமிடம் தலைசுற்றிப்போயுள்ளது. மறுநாளே வங்கிக்கு போய் இது பற்றி விசாரித்து இருக்கிறார்.
சமீப காலமாக வங்கி கணக்கில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரும் தொகை வரவு வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. சாதாரண விவசாயிகள் வங்கி கணக்கில் பெரும் தொகை வரவு வைக்கப்பட்டு சில நிமிடங்களில் மீண்டும் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளும் நிகழ்வுகள் சர்வ சாதாரணம் ஆகிவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு அடிக்கடி நடப்பதை பார்க்க முடிகிறது.

37 இலக்க தொகை வரவு வைப்பு
இதுபோன்ற விவகாரங்களில் வருமான வரித்துறையும், சட்ட அமைப்புகளும் கண்காணித்து உரிய கண்காணிப்பை நடத்த வேண்டும் என்றும், அப்பாவிகளின் வங்கி கணக்கை தவறாக எதுவும் பயன்படுத்தி மோசடி நடைபெறுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தீபக். இவரது தாயார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்தார். எனினும், தாயாரின் வங்கி கணக்கை தீபக் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தான், தனது தாயாரின் கோடக் மஹிந்திரா வங்கிக் கணக்கில் 37 இலக்க தொகை வரவு வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ரூ.1.13 லட்சம் கோடி
இந்த எண்ணிக்கை ₹10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ஆகும். இது குறித்த தகவலை சச்சின் குப்தா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. வங்கி கணக்கில் பெரும் தொகை வரவு வைக்கப்பட்டது தொடர்பாக தீபக் கூறியதாவது:-
ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு ரூ.1.13 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டதாக செல்போனுக்கு மெசேஜ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து மறுநாள் காலை வங்கியை அணுகியபோது அதிகப்படியான வைப்புத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், சந்தேகத்திற்கு இடமான பரிமாற்றம் இருப்பதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தீபக்கை நச்சரிக்க தொடங்கிய உறவினர்கள்
ஒரே நாளில் அம்பானியை பின்னுக்கு தள்ளி பல லட்சம் கோடி தொகை வரவு வைக்கப்பட்டதாக செய்தி வெளியானது, தீபக் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் அவரை தொடர்ந்து போன் செய்து நடந்த சம்பவம் பற்றி விசாரித்து இருக்கிறார்கள். இதனால், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் போயுள்ளார் தீபக்.
நெட்டிசன்கள் சரமாரி கருத்து
இதற்கிடையே, தொழில் நுட்ப கோளாறு காரணமாக இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டதா அல்லது பண மோசடி நடைபெற்றதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவிய நிலையில், உண்மையில் தீபக் அக்கவுண்டிற்கு எவ்வளவுதான் பணம் வரவு வைக்கப்பட்டது என்பது குறித்த விவாதம் நெட்டிசன்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "1 செப்டில்லியன் டிரில்லியன் அல்லது 1 அண்டெசிலியன் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக" கூறியுள்ளார். சாட்ஜிபிடியே திணறிவிடும் என்று மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார். அதேபோல, உண்மையில் இவ்வளவு பெரிய தொகையாக இருக்காது. வெறும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு காட்டியிருக்கும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications