44 இடங்களில் நாளை வேலைவாய்ப்பு திருவிழா... 70,000 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கும் பிரதமர் மோடி!
டெல்லி: மத்திய அரசு பணிகளில் சேரும் 70,000 பேருக்கு வேலைவாய்ப்பு நியமன கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி 44 இடங்களில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு திருவிழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழங்க உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா எனப்படும் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியில் சேரவுள்ளனர்.
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த ரோஸ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் அமைந்துள்ளன. ரோஸ்கர் மேளாக்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும். இளைஞர்களுக்கு அதிகாரமளித்து தேச வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இது வழங்கும்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி இணையதளத்தில் உள்ள இணையதளப் பயிற்சித் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் பயிற்சி பெறுவார்கள். அதில் 580 க்கும் மேற்பட்ட மின் கற்றல் தொகுப்புகள் எங்கிருந்தும் எந்த சாதனத்தின் மூலமும் கற்றல் என்ற வடிவத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications