சிக்கிய விஜய் மல்லையா, நீரவ் மோடி.. மொத்தம் 15 ஆயிரம் கோடி வசூல்.. மத்திய அரசு மாஸ் தகவல்
டெல்லி: நாட்டை விட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரிடம் இருந்து மொத்தம் ரூ15,113 கோடி மீட்கப்பட்டு நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய மொத்தம் 19 பேர். இந்த 19 பேரில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, , ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல், ஜுனைத் இக்பால் மேமன், ஹஜ்ரா இக்பால் மேமன், ஆசிப் இக்பால் மேமன் ஆகியோர் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் ரூ40,000 கோடி மோசடியில் தொடர்புடையவர்கள். எஞ்சிய 9 பேரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்ய அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

ரூ15,113 கோடி மீட்பு: விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை ரூ15,113 கோடி மீட்கப்பட்டு நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேசரா குடும்பம்: இவர்களில் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா, திப்தி சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா மற்றும் மற்றும் ஹிதேஷ் குமார் படேல் குஜராத்தின் முன்னணி மருந்து நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள். இவர்கள் முன்னர் உலகின் 6-வது பெரிய ஜெலட்டின் உற்பத்தி நிறுவனம் நடத்தியவர்கள்.
இக்பால் மிர்சி குடும்பம்: ஜுனைத் மேமன், ஹஜ்ரா மேமன் மற்றும் ஆசிப் மேமன் ஆகியோர் நிழல் உலக தாதா இக்பால் மிர்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இக்பால் மிர்சிதான், இந்தியாவை இன்னும் மிரள வைக்கும் நிழல் உலக தாதா, 1993 மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் வலதுகரம்.
4 பேர் நாடு கடத்தல்: விஜய் மல்லையா நாடறிந்த மதுபான தொழிற்சாலைகளின் அதிபர். மற்றொருவரான நீரவ் மோடி, குஜராத்தின் நகை வர்த்தகர். ராமச்சந்திரன் விஸ்வநாதன், தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தைச் சேர்ந்தவர். நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களில் இதுவரை 4 பேர் மட்டுமே இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது திருப்பி அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
ஆனால் யார் யாரிடம் இருந்து எவ்வளவு தொகை மீட்கப்பட்டது என்கிற விரிவான விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications