'நாங்கள் யாரையும் மதமாற்றம் செய்ய தேவையில்லை, ஆனால் ..' பரபரப்பை கிளப்பிய மோகன் பகவத் பேச்சு
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், எங்களுக்கு யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல மற்றவர்களையும் எங்கள் மக்களை மதமாற்றம் செய்ய விடமாட்டோம் எனக் குறிப்பிட்டார். அதேநேரம் மற்றவர்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்,
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
சண்டிகர் முங்கேலியில் 3 நாட்கள் நடைபெறும் 'கோஷ் ஷிவிர்' என்ற நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதமாற்றம் செய்ய தேவையில்லை
அந்த நிகழ்ச்சியில் பேசிய மேகன் பகவத், "எங்களுக்கு யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல மற்றவர்களையும் எங்கள் மாக்களை மதமாற்றம் செய்ய விடமாட்டோம். ஆனால் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறோம். உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் இந்த பாடத்தைக் கற்றுக்கொடுக்கவே இந்த புனிதமான பாரத மண்ணில் நாம் பிறந்துள்ளோம். யாருடைய வழிபாட்டு முறையையும் மாற்றாமல் நல்ல மனிதர்களை உருவாக்குவது மட்டுமே எங்கள் எண்ணமாக உள்ளது.

நாட்டின் பன்முகத்தன்மை
நமது சமூகத்தில் பன்முகத்தன்மை உள்ளது. பல தெய்வங்கள் உள்ளன, அது முக்கியமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிக் செல்ல வேண்டும். இது தான் கடந்த பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீர்குலைக்க முயலும் எவரும் நாட்டின் மக்களால் சரி செய்யப்படுவார்கள். இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து முன்னேற வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இஸ்லாமிய மக்கள் தொகை
1930கள் முதலே இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் தொகையை அதிகரிக்கத் திட்டமிட்ட பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இந்த நாட்டை பாகிஸ்தானாக மாற்றவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பஞ்சாப், சிந்து, அசாம், வங்கம் ஆகிய மாநிலங்களில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். அதிகாரம் என்றால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வாழ்வது தான். இங்கு ஒரு நபர் மட்டும் பலமாக இருக்க முடியாது. கலியுகத்தில், அமைப்புகள் தான் சக்தியாகக் கருதப்படுகிறது. நாம் அனைவரையும் ஒன்றிணைய வேண்டுமே தவிர யாரையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை.

விவசாய சட்டங்கள்
தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்க மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்து பிரதமர் நரேந்திர மோடி மிகச் சரியான ஒரு முடிவை எடுத்துள்ளார். அதேநேரம் இந்த விஷயத்தில் விவசாயிகளின் அணுகுமுறை சரியானதாக இல்லை. அவர்களது திமிர்பிடித்த அணுகுமுறையால் சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் பேசினார்.

இந்துக்கள் ஆதிக்கம்
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்பது ஒரே விஷயம் தான், வேறு வேறானது இல்லை. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்று தான். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இங்கு இந்துக்கள் அல்லது முஸ்லிம்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது. இங்கு இந்தியர்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications