தீபாவளி.. சட்டென நிஜாமுத்தீன் தர்கா சென்ற ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்! மதவெறி, மதமாற்றம் கூடாதாம்
டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் அமைந்து இருக்கும் புகழ்பெற்ற ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தர்காவுக்கு சென்ற ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமாருக்கு தலையில் தலைப்பாகை கட்டி இஸ்லாமியர்கள் மரியாதை கொடுத்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமிய பிரிவான ராஷ்டிரிய முஸ்லிம் மஞ்ச் அமைப்பின் வாயிலாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தொடர்ந்து இஸ்லாமிய தலைவர்கள், ஆளுமைகளை அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அலிகார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் உத்தின் ஷா, முன்னாள் எம்.பி ஷாகித் சித்திக் மற்றும் தொழில் அதிபர் சையத் ஷீர்வானி ஆகியோரையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசியிருந்தார்.
வாழ்க இந்தியத் திருநாடு! வளர்க மானிட நேயம்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீபாவளி வாழ்த்து!
மோகன் பகவத்
இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் மூத்த இஸ்லாமிய மதகுருவான அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியை மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், பாஜகவின் முன்னாள் அமைப்புச் செயலாளரான ராம் லால் ஆகியோர் சந்தித்துப் பேசினார்.
நிஜாமுத்தீன் தர்கா
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தர்காவுக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் சென்றுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்காவுக்கு சென்ற அவர் விளக்குகளை ஏற்றி மரியாதை செலுத்தினார். அத்துடன் அங்கிருந்த மதகுருமார்களுக்கு பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கினார்.
இந்திரேஷ் குமார் விளக்கம்
இதுகுறித்து பேசிய இந்திரேஷ் குமார், "தீபாவளி பண்டிகை மத வேற்றுமை, பிராந்திய வேற்றுமைகளை அழிக்கும். இந்தியா கொண்டாட்டங்கள், யாத்திரைகளின் பூமி. அனைவரும் ஏழைகளுக்கு உதவுவது, சகோதரத்துவத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு மதவெறி, தீங்கு, வெறுப்பு, கலவரம், போர் வேண்டாம் என நமக்கு போதிக்கிறது.
மதமாற்றம் கூடாது
நமக்கு அமைதியும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் வேண்டும். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்து வன்முறையை தூண்டக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் மதங்களையும், சாதியையும் பின்பற்ற வேண்டும். மற்ற மதங்களை இழிவுபடுத்தக்கூடாது. அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டால் இங்கு இந்தியாவில் அடிப்படைவாதிகளுக்கு இடம் இருக்காது. மற்ற மதங்களை மதிக்கும் நாடு இந்தியா." என்றார்.