எம்.ஜே. அக்பர் விவகாரம்.. என்ன முடிவெடுப்பது.. குழப்பத்தில் ஆர்.எஸ்.எஸ்!
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான மீ டூ புகார் விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்பதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடையே இரு விதமான கருத்து நிலவுகிறது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் அக்பர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்களாம்.
எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பரபரப்பான செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளனர். இதனால் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இப்போதைக்கு அக்பரை நீக்குவதில்லை என்ற முடிவில் பாஜகவும், ஆட்சித் தலைமையும் உள்ளதால் அக்பர் பதவியில் நீடிக்கிறார். இந்த நிலையில் தன் மீது புகார் கொடுத்த பெண் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார் அக்பர்.
மறுபக்கம் இந்த விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் இரு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. பெரும்பாலானவர்கள் அக்பருக்கு எதிராக உள்ளனர். அதேசமயம், இந்த விவகாரத்தை கையாளுவது தொடர்பாக அவர்களுக்குள் இரு விதமான கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஒழுக்கத்துடன், மற்றவர்களுக்கு உதாரணாக திகழ வேண்டும். ஒழுக்க கேடு காரணமாக கட்சியில் பலர் நீக்கப்பட்டுள்ள முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே அக்பரும் நீக்கப்பட வேண்டும் ஒரு தரப்பு கூறுகிறது. அதேசமயம், அக்பர் மீதான புகார்கள் அனைத்தும் அவர் பத்திரிகையாளராக இருந்தபோது நடந்து கொண்ட விதம் தொடர்பானவை. அமைச்சரான பின்னர், அரசியல்வாதியான பின்னர் அவர் மீது எந்தப் புகாரும் இல்லை எனவே அக்பர் மீது நடவடிக்கை தேவையில்லை என்று சிலர் வாதிடுகின்றனராம்.
[சின்மயிக்காக பேசும் சித்தார்த் போன்றோர் ஸ்ரீரெட்டிக்கு வாய் திறக்காமல் இருந்தது ஏன்- சீமான் கேள்வி]
ஒரு தரப்போ, தன் மீது ஹவாலா புகார் வந்தபோது அத்வானி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்தார். வழக்கிலிருந்து மீண்ட பின்னர்தான் அவர் தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கே வந்தார். அதேபோல தார்மீக அடிப்படையில் அக்பரும் விலக வேண்டும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது.
இப்படி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவும் போதிலும் கூட, அக்பர் தரப்பு வாதத்தை ஏற்பதில்லை என்ற முடிவில் அனைவரும் உறுதியாக உள்ளனராம். அவர் வெளியேற வேண்டும் என்ற கருத்தும் பெரும்பான்மையாக உள்ளதாம்.
பாஜகவைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தால் கட்சிக்கு என்ன லாபம், நஷ்டம் என்ற கணக்கைப் பார்த்துக் காய் நகர்த்தி வருகிறது. எனவே கட்சிக்குப் பாதகமில்லாத வகையில் இதில் அது செயல்படும் என்றே தெரிகிறது.