இப்படி பன்றீங்களேமா.. 44 லட்சம் தடுப்பூசிகளை வீணாக்கிய மாநிலங்கள்..தமிழ்நாடு என்ன செய்தது தெரியுமா?
டெல்லி: ஏப்ரல் 11 வரை மாநிலங்களால் 23% கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களிடம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்து வந்த நிலையில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேர ஊரடங்கு: சென்னையில் புறநகர் ரயில்கள் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை ரத்து
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு வழிகாட்டு முறைகள் என எவற்றுக்கும் அடங்காமல் தொடர்ந்து தன் போக்கில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கலங்கடிக்கும் கொரோனா
கொரோனவை கட்டுப்படுத்த தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதுதவிர கொரோனாவை விரட்டியடிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
23% தடுப்பூசிகள் வீண்
ஆனால் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களிடம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது. மாநிலங்களிடம் தடுப்பூசி இருப்பில் உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில் ஏப்ரல் 11 வரை மாநிலங்களால் 23% தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேள்வி கேட்கப்பட்டது.
தமிழ்நாடு பர்ஸ்ட்
அப்போது ஏப்ரல் 11-ம் தேதி வரை மாநிலங்கள் பயன்படுத்திய மொத்தம் 10.34 கோடி கொரோனா டோஸில் மொத்தம் 44.78 லட்சம் தடுப்பூசி அளவு வீணடிக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்தான் தடுப்பூசியை அதிகம் வீணடித்துள்ளன. அதே வேளையில் கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகியவை தடுப்பூசியை சிறிதளவும் வீணடிக்காமல் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எத்தனை பேருக்கு தடுப்பூசிகள்?
இந்தியாவில் இன்று வரை 13,01,19,310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.