‛நமஸ்தே டிரம்ப்’ ஞாபகம் இருக்கா.. டொனால்ட் டிரம்புக்காக இந்தியா செய்த செலவு தெரியுமா? முழுவிபரம்
டெல்லி: 2020ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் தனது மனைவி, மகள், மருமகனுடன் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணமாக வந்து 36 மணிநேரம் இருந்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த ‛நமஸ்தே டிரம்ப்' உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்ற நிலையில் டொனால்ட் டிரம்புக்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது பற்றிய ஆர்டிஐ கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
Recommended Video
அமெரிக்கா அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24, 25 ஆகிய 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
டொனால்ட் டிரம்புடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி
அமெரிக்கா அதிபராக அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு முதல் முறையாக வந்த டொனால்ட் டிரம்ப் தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லி ஆகிய இடங்களை பார்வையிட்டார். பிப்ரவரி 24ல் அகமதாபாத் சென்ற டொனால்ட் டிரம்ப் சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் புதிதாக கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானத்தில் நடந்த "நமஸ்தே டிரம்ப்" கூட்டத்தில் உரையாற்றினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
தாஜ்மஹால் பார்வையிட்ட டிரம்ப்
அதன்பிறகு ஆக்ரா சென்று உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹாலை அவர் பார்வையிட்டார். அதன்பிறகு டெல்லியில் தங்கிய அவர் பிப்ரவரி 25ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேசினார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப்பின் 2 நாள் சுற்றுப்பயணத்துக்கு இந்தியா சார்பில் செலவு செய்தது எவ்வளவு? என்பது பற்றிய கேள்வி எழுந்தது.
ஆர்டிஐ மூலம் தகவல்
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் (ஆர்டிஐ) மிஷால் பத்தேனா என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தார்.
இதுதொடர்பாக அவர் கடந்த 2020 அக்டோபர் மாதம் 24ம் தேதி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து அவர் மேல்முறையீடு மனு செய்தார். ஆர்டிஐக்கான மேல்முறையீட்டு ஆணையத்தை அவர் அணுகிய நிலையில் தற்போது அதற்கான பதில் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.38 லட்சம் வரை
அதில், ‛‛பிப்ரவரி 24, 25 ஆகிய நாட்களில் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வந்தார். அவரது தங்குமிடம், உணவு, பாதுகாப்பு விஷயங்களுக்காக இந்திய அரசு சார்பில் ஏறக்குறைய ரூ.38 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.