சனாதன ஒழிப்பு முழக்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் போராட்டம்!
டெல்லி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை கற்பிக்கக் கூடியது சனாதன தர்மம். ஆகையால் சனாதன தர்மத்தை எதிர்க்காமல் ஒழித்தாக வேண்டும் என்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. ஆனால் சனாதனிகளை இனப்படுகொலை செய்ய தூண்டிவிட்டார் உதயநிதி ஸ்டாலின் என பாஜகவினர் பொய்யான வதந்தியை பரப்பிவிட்டனர்.

பாஜகவினர் பரப்பிய பொய் வதந்தியை முன்வைத்து பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி சீவ வேண்டும் என சாமியார்கள் விலை வைத்தனர். உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆ.ராசா, திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் சனாதன தர்மம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என தடை விதிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுக இடம் பெற்றுள்ள "இந்தியா" கூட்டணியின் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் உதயநிதி ஸ்டாலினோ, புதிய நாடாளுமன்றத்துக்குள் பழங்குடி இனத்தவரான கணவரை இழந்த நாட்டின் ஜனாதிபதியை அழைக்க மறுப்பதுதான் சனாதனம்; ஆகையால் சனாதனத்தை ஒழித்தே தீருவோம் என முழக்கமிட்டு வருகிறார். சனாதன தர்மம் எச்.ஐ.வி. போல தொற்று நோய் என்றார் மூத்த திமுக தலைவர் ஆ.ராசா. சமாஜ்வாதி கட்சியின் மெளரியாவும் இதேபோல சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று Sanatan Mahamandal என்ற அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சாமியார்கள் ஒன்று திரண்டனர். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சியின் மெளரியா உள்ளிட்டோருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை சாமியார்கள் டெல்லியில் நடத்தினர். உதயநிதி உள்ளிட்டோரின் உருவபொம்மைகளையும் இந்த சாமியார்கள் எரித்து கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications