சபாநாயகரின் முடிவு எடுக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது- குமாரசாமி தரப்பு வாதம்!
டெல்லி: சபாநாயகரின் முடிவு எடுக்கும் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என கர்நாடகா முதல்வர் குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிட்டார்.
எம்.எல்.ஏக்கள் ராஜினமா விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தியது.

இதில் எம்.எல்.ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சபாநாயகர் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிட்டார்.
அவர் தமது வாதத்தில் கூறியதாவது:
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. அவர்கள் அமைச்சர்களாக வேண்டும் என விரும்பினர். மும்பைக்கு விமானத்தில் செல்ல முடிந்த அவர்களால் சபாநாயகரை நேரில் சந்திக்க முடியாதது ஏன்?
எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டது குறித்து சபாநாயகர் விசாரணை நடத்துகிறார். அரசியல் சாசனத்தின் 32-வது பிரிவின் கீழான இத்தகைய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மனுவை ஏற்க கூடாது என உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றன.
சபாநாயகர் மீதான அதிருப்தி எம்.எல்.ஏக்களின் குற்றச்சாட்டுகள் தவறானவை. அத்துடன் சபாநாயகரின் முடிவு எடுக்கும் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. இது உச்சநீதிமன்றத்தின் வரம்பு எல்லைக்குட்பட்டது அல்ல.
இவ்வாறு ராஜீவ் தவான் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications