அலோபதி மருத்துவ முறையை ஏன் பாபா ராம்தேவ் விமர்சிக்கிறார்? தடை விதித்து உச்சநீதிமன்றம் குட்டு!
டெல்லி: அலோபதி மருத்துவ முறையை சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சிக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
பதஞ்சலி என்ற பெயரில் ஆயுர்வேத அடிப்படையில் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் சர்ச்சை நபரான பாபா ராம்தேவ். கடந்த ஆண்டு ஆங்கில மருத்துவத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி சர்ச்சையில் சிக்கியவர் ராம்தேவ். கடந்த ஆண்டு பாபா ராம்தேவ் வெளியிட்ட ஒரு வீடியோவில், கொரோனா காலத்தில் ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார். இதற்கு அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அத்துடன் அலோபதி மருத்துவத்தை தவறாகப் பேசிய பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கும் தொடர்ந்தது.
இவ்வழக்கில் பல்வேறு கட்டவிசாரணைகளை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் ஹிமா கோலி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று கூறியதாவது: பாபா ராம்தேவுக்கு என்னதான் ஆச்சு? யோகாவில்தான் ராம்தேவ் புகழ் பெற்றவர். யோகா பயின்ற ஒருவர் அலோபதி மருத்துவ முறையை எப்படிவிமர்சிக்க முடியும்? அலோபதி மருத்துவ முறைகளை விட ஆயுர்வேத மருந்துகள், மருத்துவ முறைதான் சிறந்தது என்பத்கற்கு ஏதேனும் உத்தரவாதம் இருக்கிறதா? மருத்துவர்கள், மருத்துவ கட்டமைப்பை ராம்தேவ் விமர்சிப்பது என்பது பொதுமக்களின் சுகாதார நலனை பாதிக்கக் கூடியதாகும். பாபா ராம்தேவ் இதர மருத்துவ முறைகள் குறித்து அவதூறு பரப்பக் கூடாது. இவ்வாறு தலைமை நீதிபதி பெஞ்ச் தெரிவித்தது. மேலும் மத்திய அரசும் பாபா ராம்தேவும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவிலும் இதே கருத்தை தெரிவித்திருந்தது. பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவ முறையை விமர்சிக்கக் கூடாது; அப்படி விமர்சித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தவும் கூடாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications