மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க தடையில்லை.. உச்சநீதிமன்றம் உத்தரவு- திமுகவுக்கு வெற்றி!
டெல்லி : மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் புதிய முடிவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், அரசின் புதிய முடிவிற்கு உடன்படும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு ரூ.7500 ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் நலப்பணியாளர்களை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறாதது ஏன்?.. தமிழக அரசு விளக்கம்
மக்கள் நலப் பணியாளர்கள்
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2011ல் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது ஐகோர்ட். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததைத் தொடர்ந்து, வழக்கு நிலுவையில் இருந்தது.
மீண்டும் பணியில் சேர்ப்போம்
இதற்கிடையே, கடந்த ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் ரூ.7,500 ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, மக்கள் நலப் பணியாளர்களை ரூ.7,500 ஊதியத்துடன் காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்த தமிழக அரசு முன்மொழிவு கொண்டுவந்தது.
இன்று உத்தரவு
இதனை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. பின்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்தவில்லை. புதிய கொள்கையின்படி பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை. இந்த முன்மொழிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம்.
அரசின் முடிவில் தலையிட முடியாது
அரசின் முன்மொழிவை மறுத்து பணியை ஏற்காதவர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. ஆனால் ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.