ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 7 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தையும் தாண்டி சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது ஆளுநர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் இந்த 7பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் 7 பேரை விடுவிக்கும் முடிவு ஆளுநர் முன்பு இருப்பதால் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என்று கூறி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications