ராமர் சேது பாலம்: சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்.. மார்ச் 9 இல் விசாரணை
டெல்லி: ராமர் சேது பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தீவு அல்லது பாம்பன் தீவில் உள்ளது ராமர் சேது பாலம். இதை ஆடம்ஸ் பாலம் என்றும் அழைப்பதுண்டு. தமிழகத்தின் தென்கிழக்கு கரையிலும் இலங்கைக்கு வட மேற்கு கரையிலும் இருக்கிறது.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி இடையே 83 கி.மீ. கடல் பகுதியை ஆழப்படுத்தி, கப்பல்கள் சென்று வரும் வகையில் பாதை அமைக்க சேது சமுத்திர திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியா- இலங்கை இடையே புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ராமர் சேது பாலம் இந்த திட்டத்தால் சேதமடையும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை கைவிடுவதாக அப்போதிருந்த மத்திய அரசே அறிவித்தது. மேலும் இந்த திட்டத்தால் சமூக பொருளாதார தீமைகளை கருத்தில் கொண்டு கப்பல் பயணிக்கும் பாதையை வேறு இடத்தில் அமல்படுத்த விரும்புவதாக தெரிவித்தது.
மேலும் ராமர் சேது பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதுகுறித்து விசாரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி அப்போதிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே முன்பு கோரினார்.
அவர் ஓய்வு பெற சில நாட்களே உள்ளதால் அந்த வழக்கை தனக்கு பின்னர் பதவியேற்கும் தலைமை நீதிபதி ரமணா விசாரிப்பார் என பாப்டே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரமணாவிடம் இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது முக்கியமான விவகாரம் என்பதால் கவலையாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
இதை புரிந்து கொண்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கிற்கு மத்திய அரசு ஏதாவது பதில் அளித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு " கடந்த காலங்களில் மத்திய அரசு வாக்கு மூலங்களை அளித்துள்ளது என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார். இதையடுத்து வரும் மார்ச் 9 ஆம் தேதி ராமர் சேது பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications