கொரோனா வழக்கு: ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை தமக்கான ஆலோசகராக நியமித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து கொரோனா வழக்குகளையும் தாமே முன்வந்து விசாரிப்பதாக அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், தமக்கான ஆலோசகராக ஸ்டெர்லைட் நிறுவனத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை நியமித்திருக்கிறது.
கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, பிச்சை எடுத்தோ திருடியோ கடன் வாங்கியோ பொதுமக்களுக்கு ஆக்சிஜனை தர வேண்டியது மத்திய அரசின் கடமை என கடுமையாக உயர்நீதிமன்றம் சாடியது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் அனைத்து கொரோனா வழக்குகளையும் இனி உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி போப்டே இன்று தெரிவித்தார். அப்போது வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் 1,000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். அந்த 1,000 டன் ஆக்சிஜனையும் இலவசமாக வேதாந்தா நிறுவனம் வழங்கும் என்றார். அப்போது மத்திய அரசு தரப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், தடுப்பூசிகள் உள்ளிட்டவைகளுக்கான தட்டுப்பாடுகளை போக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் கொரோனா வழக்குகளை விசாரிக்கும் போது தங்களுக்கு ஆலோசகராக வேதாந்தா- ஸ்டெர்லைட் நிறுவனத்துக்காக ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை நியமிப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருக்கும் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேவுக்கு, எப்படி இந்தியாவில் நிலவும் சூழல் தெளிவாகத் தெரியும், அதை அவர் எப்படி கையாள முடியும் என்று பல சட்ட நிபுணர்கள், டாக்டர்கள், பொதுமக்கள், பல் துறையினர் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications