குரோம்பேட்டையில் சோகம்.. சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு.. வீட்டுக்கு திரும்பிய மாணவி பஸ் மோதி பலி
குரோம்பேட்டையில் சோகம்.. சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு.. வீட்டுக்கு திரும்பிய மாணவி பஸ் மோதி பலி
சென்னை: சென்னை குரோம்பேட்டை அருகே பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிய 12-ம் வகுப்பு மாணவி அரசு பஸ் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக இன்று விடுமுறை நாள் என்றாலும் சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களின், நினைவை போற்றுவதற்காக அனைத்து மாணவ மாணவிகளும் பள்ளிக்கு சென்று சுதந்திரதினத்தை கொண்டாடினர்.
5 கட்சி அமாவாசை.. மதுரை சரவணனை விமர்சித்த எச் ராஜா.. டாக்டர் முதலில் இருந்த கட்சி எது தெரியுமா?
பள்ளியில் சுதந்திர தினம்
அந்த வகையில் இன்று மாணவ- மாணவிகள் பலரும் பள்ளிக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடி மழிந்தநிலையில், சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு திரும்பிய மாணவி பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி லட்சுமிஸ்ரீ. 17 வயதான இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாள்.
மாணவி மீது மோதிய பஸ்
பள்ளி அருகில் தான் இருப்பதால் மாணவி பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்றும் மாணவி லட்சுமிஸ்ரீ தனது சக தோழிகளுடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். தொடர்ந்து பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு இனிப்புகளுடன் வீட்டுக்கு திரும்பினார். வழக்கமான மகிழ்ச்சியுடன் மாணவி லட்சுமிஸ்ரீ சக தோழிகளுடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.
அஸ்தினாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த 52 H என்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது வேகமாக மோதியது.
தலை நசுங்கி சாவு
இதில் மாணவி லட்சுமிஸ்ரீ நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த பஸ்சின் பின் சக்கரம் மாணவியின் உடலில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனாள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தை பார்த்து மாணவியின் சக தோழிகள் கதறி அழுதனர். மேலும் அங்கிருந்தவர்களும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளும் பதற்றமடைந்தனர். மேலும் சிறிது நேரத்தில் அங்கு பெருமளவில் மக்கள் திரண்டனர்.
பஸ் டிரைவர் போலீசில் சரண்
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவர் 49 வயதான தேவகுமார் என்பவர் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக கண்டன் கோஷம்
சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பும்போது மாணவி பஸ் மோதி பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளே இந்த விபத்துக்கு காரணம் என கூறி மாநகராட்சியையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.