கர்ப்பிணி கூட்டு பலாத்காரம்... 7 பேர் கொலை! விடுவித்த குஜராத் பாஜக அரசு - கொந்தளிக்கும் எஸ்டிபிஐ
டெல்லி: குஜராத்தில் கூட்டு பாலியல் பலாத்கார மற்றும் கொடூர கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்து இருக்கும் குஜராத் அரசின் நடவடிக்கை முழுமையான அநீதி என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரது 2 வயது குழந்தை உள்பட குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பதினொரு குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், குஜராத் அரசின் இந்த நடவடிக்கை முழுமையான அநீதி எனவும் எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எஸ்டிபிஐ அறிக்கை
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே கூறுகையில், "குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு விடுவிக்க ஆணை பிறப்பித்ததை அடுத்து, தண்டனை பெற்ற கொடூரக் குற்றவாளிகள் அனைவரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் கலவரம்
2002 மார்ச் 3 அன்று, 20-30 பேர் கொண்ட கும்பல் அரிவாள்கள், வாள்கள் மற்றும் தடிகளுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு அந்த கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

11 பேர் விடுதலை
இந்த வழக்கு விசாரணை அகமதாபாத்தில் தொடங்கப்பட்டாலும், பின்னர் சாட்சிகள் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 இல் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பம்பாய் உயர்நீதிமன்றம் 2018 இல் தண்டனையை உறுதி செய்தது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்விடுதலை கோரிக்கையை ஏற்று, தற்போது தண்டனையைக் குறைத்து, 11 கைதிகளையும் குஜராத் அரசு விடுவித்துள்ளது.

பெண்களுக்கு அவமானம்
கர்ப்பிணியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, 7 பேரை கொடூரமாக கொலைச் செய்த கொலையாளிகள் சிறையில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக நடமாடவிட்டுள்ள குஜராத் அரசின் இந்தச் செயல், ஒட்டுமொத்த பெண் மக்களுக்கும் அவமானம், சமூகத்துக்கு இழைக்கும் அநீதி என்றும், குஜராத் அரசின் இந்த நடவடிக்கை சமூகத்திற்கு ஒரு தவறான சமிக்ஞையை தருவதோடு, பாதுகாப்பின்மை மற்றும் அவமானப்படுத்தும் சூழலையும் உருவாக்குகிறது." என்று இலியாஸ் தும்பே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications