5 மாநில சட்டசபை தேர்தல்கள்: ரூ1,760 கோடி ரொக்கம் பறிமுதல்- 2018 தேர்தலை விட 7 மடங்கு அதிகமாம்!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ரூ1,760 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை விட 7 மடங்கு இது அதிகமாம்.
மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. மிசோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப் பதிவு நிறைவடைந்துவிட்டது. சத்தீஸ்கரில் நவம்பர் 7, நவம்பர் 17 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மிசோரமில் ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ந் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்தது. ராஜஸ்தானில் வரும் 25-ந் தேதியும் தெலுங்கானாவில் வரும் 30-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து மாநில வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தற்போது ராஜஸ்தான், தெலுங்கானாவில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என பெருந்தலைகள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனைகளையும் இம்மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.
மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படும் பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்வது இந்திய தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால் அதிகரித்துள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.1760 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இது 2018-ம் ஆண்டில் இந்த மாநிலங்களில் நடைபெற்ற முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் கைப்பற்றப்பட்டதை விட 7 மடங்கு (ரூ.239.15 கோடி) அதிகமாகும்.
குஜராத், ஹிமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ரூ.1400 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறை தேர்தல் செலவின கண்காணிப்பு அமைப்பு மூலம் கண்காணிப்பு செயல்முறையில் தொழில்நுட்பத்தையும் ஆணையம் இணைத்துள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் 20.11.2023 நிலவரப்படி அதிகபட்சமாக தெலங்கானாவில் ரூ.659 கோடியே 20 லட்சம் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், ஆபரணங்கள், இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications