பாலஸ்தீன, ஈரானிய தூதர்களின் செமினார் திடீர் ரத்து! ஜேஎன்யுவில் மீண்டும் சலசலப்பு
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பாலஸ்தீன, ஈரான் மற்றும் லெபனான் நாடுகளின் தூதர்கள் கருத்தரங்கம் நடந்த இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் ஏதும் சொல்லப்படாத நிலையில், ஜேஎன்யு மீண்டும் பரபரபாகியுள்ளது.
இந்திய அரசியலை பற்றி எழுதுவதென்றால் ஜேஎன்யுவை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. காரணம், ஏராளமான அரசியல் தலைவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கி கொடுத்திருக்கிறது. நாட்டில் ஏதேனும் ஒரு மூலையில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் கூட ஜேஎன்யுவில் போராட்டங்களாக பிரதிபலிக்கும். இந்தியா சுதந்திரமடைந்தது தொடங்கி இன்று வரை, நாட்டின் அரசியலில் ஜேஎன்யு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன, ஈரான் மற்றும் லெபனான் நாட்டு தூதர்களின் செமினார் நடக்க இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் இவை தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, இன்று காலை 11 மணிக்கு, பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வுகளுக்கான மையத்தில், 'மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் சமீபத்திய வளர்ச்சிகளை ஈரான் எவ்வாறு பார்க்கிறது?' என்கிற தலைப்பில் ஈரானிய தூதர் டாக்டர் இராஜ் எலாஹி பேச இருந்தார். ஆனால் காலை 8 மணிக்கு, மாணவர்களுக்கு கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரான சிமா பைத்யா ஒரு மெயிலை அனுப்பியுள்ளார். அதில் ஈரானிய தூதரின் கருத்தரங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது பாலஸ்தீன வன்முறை குறித்து நவம்பர் 7ம் தேதி, மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருந்த, பாலஸ்தீன தூதர் அட்னான் அபு அல்-ஹைஜாவின் கருத்தரங்கும் ரத்து செய்யப்படுவதாகவும், லெபனான் நிலைமை குறித்து நவம்பர் 14ம் தேதி உரையாற்ற இருந்த லெபனான் தூதர் டாக்டர் ராபி நர்ஷாலின் கருத்தரங்கமும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து ஈரானிய மற்றும் லெபனான் தூதரகங்களின் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் விசாரித்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கிடைத்த தகவலின் படி, செமினார் ரத்து முழுக்க முழுக்க பல்கலைக்கழகம் தரப்பிலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், அதற்கான காரணம் கூட தூதர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரான சிமா பைத்யாவை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொள்ள முயன்று இருக்கிறது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. சிலர், நிகழ்ச்சி ரத்துக்கு 'ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்' காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். 'ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்' கீழ்தான் மேற்கு ஆசிய ஆய்வுகள் மையம் செயல்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
இதன் நிர்வாகிகள் சிலர், செமினார் மூலம் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று அச்சம் தெரிவித்திருக்கின்றனர். இதுவே நிகழ்ச்சி ரத்துக்கான காரணம் என பலர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications