"இந்துக்கள் குறித்து ராகுல் சொன்னது 100% சரி.." நாடாளுமன்ற உரை விவகாரம்! சங்கராச்சாரியார் முழு ஆதரவு
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தியின் பேச்சு டிரெண்டானது. அதில் ஒரு பகுதியை இப்போது இணையத்தில் பரப்பும் சிலர் ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராகப் பேசுவதாக இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே ராகுல் காந்திக்கு ஆதரவாக இப்போது சங்கராச்சாரியார் சுவாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியது. அதில் தேர்தலில் வென்ற எம்பிக்கள் எல்லாம் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையாற்றியனர்.

ராகுல் காந்தி: இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த நிலையில், அப்போது ராகுல் காந்திக்கும் பாஜக எம்பிக்களுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக இணையத்தில் சில கருத்துகள் பரவியது. இதற்கிடையே ராகுல் காந்திக்கு ஜோஷி மடத்தின் 46வது சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா ஆதரவாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பாஜகவை சரமாரியாகக் குற்றஞ்சாட்டினார். அப்போது பாஜக தொடர்பாக ராகுல் காந்தி சில கருத்துகளைக் கூறிய நிலையில், பிரதமர் மோடி நேரடியாக எழுந்து ராகுல் பேச்சைக் குறுக்கிட்டார்.

வாக்குவாதம்: ராகுல் காந்தியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ராகுல் காந்தி வன்முறையாளர்கள் என முத்திரை குத்த முயல்வதாகப் பிரதமர் மோடி பதிலளித்தார். இதையடுத்து ராகுல் காந்தியும் அதற்குப் பதிலளிக்க நாடாளுமன்றத்தில் அது காரசாரமான வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
ஜோஷி மடத்தின் சங்கராச்சாரியார்: இதற்கிடையே சங்கரர் நாட்டில் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்றாக அறியப்படும் ஜோஷி மடத்தின் சங்கராச்சாரியார் இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ராகுல் காந்தியின் முழு உரையையும் நாங்கள் கவனமாகக் கேட்டோம். இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்பதையே அவர் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியிருந்தார்.
இப்போது ராகுல் காந்தியின் உரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே வெட்டி, அதை ஆன்லைனில் பரப்பி வருகிறார்கள். அவர்கள் உண்மையைச் சிதைத்துப் பரப்பி வருகிறார்கள். ராகுல் காந்தியின் பேச்சை முழுமையாகக் கேட்காமல் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் இணையத்தில் பரப்புவது தவறானது.. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
என்ன நடந்தது: ராகுல் காந்தி கடந்த ஜூலை 1ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது தான் இந்த விவாதம் ஏற்பட்டது. அவரது பேச்சின் பல பகுதிகளுக்கு பாஜகவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாகச் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிடவும் செய்தனர். இதையடுத்து மறுநாள் ராகுல் காந்தியின் பேச்சில் சில பகுதிகளை நீக்கச் சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, தவறாக எதையும் பேசாத போது தனது பேச்சின் பகுதிகளை நீக்கியதற்கு அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications