குண்டா இருக்கீங்க.. சர்ச்சைப் பேச்சுக்கு.. வசுந்தரா ராஜேவிடம் ஸாரி கேட்ட சரத் யாதவ்
டெல்லி: ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் உடல் அமைப்பு குறித்து மோசமாக வர்ணித்த மூத்த அரசியல் தலைவர் சரத் யாதவ் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அம்மாநில சட்டசபை தேர்தலை பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய லோக்தந்திரிக் ஜனதாதளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசினார். மிக ஆவேசமாக பேசிய அவர், வசுந்தரா ராஜேவின் உடல் அமைப்பு குறித்து மோசமாக பேசினார்.
தரம் தாழ்ந்து சரத்யாதவ் பேசியது, கடும் கண்டனத்துக்குள்ளானது. அவரது பேச்சால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வசுந்தரா தேர்தல் ஆணையத்தை நாடினார். சரத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந் நிலையில் தரக்குறைவான தமது பேச்சுக்கு சரத் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதை தெரிவித்த சரத், இந்த விவகாரத்தில் வசுந்தராவின் அறிக்கையை தாம் பார்த்ததாக கூறினார்.
தங்கள் இரு குடும்பங்களுக்கும் நீண்ட கால உறவு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வசுந்தராவின் மனது புண் பட்டிருக்குமேயானால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றையும் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.