ஷின்சோ அபே மறைவு.. இது கடைசி சந்திப்பு என நினைக்கவில்லை.. போட்டோ பதிவிட்டு பிரதமர் மோடி உருக்கம்
டெல்லி: ‛‛ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு முழு இந்தியாவும் ஜப்பானுடன் சேர்ந்து வருந்துகிறது. நாளை ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும்'' என பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் கடைசியாக சந்தித்த போட்டோவை பதிவிட்டு, ‛‛இதுதான் கடைசி சந்திப்பாக இருக்கும் என நினைக்கவில்லை'' என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜப்பானில் பிரதமாராக இருந்தவர் ஷின்சோ அபே. இவர் தனது பிரதமர் பதவியை 2020ல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவர் பதவியில் இருந்தபோது இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு மேம்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள நாரா என்ற பகுதியில் மக்கள் மத்தியில் ஷின்சோ அபே பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு.. அருமை நண்பர் என வேதனையை பகிர்ந்த பிரதமர் மோடி, மன்மோகன் சிங்
மருத்துவமனையில் மரணம்
இதில் ஷின்சோ அபேயின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே மரணமடைந்தார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்நிலையில் ஷின்சோ அபே மீதான துப்பாக்கிச்சூடுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதோடு, அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷின்சோ அபேவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையேயான உறவு பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ஷின்சே அபேவுடன் சேர்ந்து சமீபத்தில் எடுத்து கொண்ட போட்டோவை டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை
எனது அன்பு நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேவின் மறைவை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். ஷின்சோ அபே ஒரு உலகளாவிய அரசியல்வாதி. சிறந்த தலைவர். ஜப்பானை உலகில் சிறந்த இடமாக மாற்ற வேண்டி தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
பல ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்பு
ஷின்சோ அபே உடனான எனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முந்தையது. குஜராத் முதல்வராக இருந்தபோதே அவரை பற்றி அறிந்து கொண்டேன். நான் பிரதமரான பிறகு எங்கள் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் பற்றிய அவரது கூர்மையான அறிவு எனக்கு வெகுவாக கவர்ந்தது.
கடைசி சந்திப்பு என நினைக்கவில்லை
சமீபத்தில் ஜப்பான் சென்றபோதும் கூட ஷின்சோ அபேவை சந்தித்து பல விஷயங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எப்போதும் போல் கூர்மையான அறிவுடன் இருந்தார். இதுதான் எங்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஷின்சோ அபேவின் குடும்பத்துக்கும், ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
நாளை தேசிய துக்க தினம்
ஷின்சோ அபே இந்தியா-ஜப்பான் இடையேயான உறவை மேம்படுத்தியதில் முக்கியமானவர். இவரது மறைவால் இன்று முழு இந்தியாவும் ஜப்பானுடன் சேர்ந்து வருந்துகிறது. இந்த நேரத்தில் ஜப்பான் நாட்டு சகோதர-சகோதரரிகளுடன் நாங்கள் இருக்கிறோம். ஷின்சோ அபேவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூலை 9(நாளை) ஒருநாள் தேசிய துக்கத்தினம் அனுசரிக்கப்படும்'' என உருக்கமாக கூறியுள்ளார்.
ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி
மேலும் பிரதமர் நரேந்திர மோடி-ஷின்சோ அபேவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‛‛டோக்கியோவில் எனது அன்பு நண்பர் ஷின்சோ அபேவுடன் நான் சமீபத்தில் சந்தித்த படத்தை பகிர்கிறேன். இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்துவதில் எப்போதும் ஆர்வமுள்ள ஷின்சோ அபே ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்'' என பிரதமர் மோடி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.