ஷின்சோ அபே மறைவு.. இந்தியாவில் இன்று தேசிய துக்க தினம்.. அரைகம்பத்தில் பறக்கும் தேசியக்கொடிகள்
டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவையொட்டி இன்று இந்தியாவில் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டை, ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
ஜப்பானில் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இவர் தனது பிரதமர் பதவியை 2020ல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இவர் இந்தியாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். இந்நிலையில் ஜப்பானில் உள்ள நாரா என்ற பகுதியில் மக்கள் மத்தியில் ஷின்சோ அபே நேற்று பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ஷின்சோ அபே மறைவு.. இது கடைசி சந்திப்பு என நினைக்கவில்லை.. போட்டோ பதிவிட்டு பிரதமர் மோடி உருக்கம்
மருத்துவமனையில் மரணம்
இதில் ஷின்சோ அபேயின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே மரணமடைந்தார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, மன்மோகன் சிங் இரங்கல்
இந்நிலையில் ஷின்சோ அபே மீதான துப்பாக்கிச்சூடுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்பட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு இரங்கலும் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் இருவருக்கும் இடையேயான .றவு பற்றியும், இந்தியா-ஜப்பான் உறவு பற்றியும் உருக்கமாக கூறியிருந்தார்.
இன்று தேசிய துக்கத்தினம்
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛எனது அன்பு நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேவின் மறைவை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். ஷின்சோ அபே ஒரு உலகளாவிய அரசியல்வாதி. சிறந்த தலைவர். இருவருக்கும் இடையேயான உறவு நீண்டகாலமானது. நான் பிரதமரான பிறகு எங்கள் நட்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஜப்பான் சென்றபோதும் கூட ஷின்சோ அபேவை சந்தித்து பல விஷயங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஷின்சோ அபேவின் குடும்பத்துக்கும், ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஷின்சோ அபே இந்தியா-ஜப்பான் இடையேயான உறவை மேம்படுத்தியதில் முக்கியமானவர் ஷின்சோ அபேவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூலை 9(இன்று) ஒருநாள் தேசிய துக்கத்தினம் அனுசரிக்கப்படும்'' என உருக்கமாக கூறியுள்ளார்.
அரைக்கம்பத்தில் தேசியக்கொடிகள்
அதன்படி இன்று ஷின்சோ அபேவின் மறைவுக்கு இந்தியாவில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டை, ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்ற கட்டங்கள் உள்பட அரசு கட்டங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.