பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு..வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்.. மத்திய அரசு சொல்வதென்ன?
சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கான பெட்ரோல்-டீசல் போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
டெல்லி: நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல் டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடின்றி விநியோகிக்க கூடுதல் டேங்கர் லாரிகள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் பயன்பாடு திடீரென அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக தனியார் விற்பனை நிலையங்களை விட, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை அதிகரித்து வருவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல விற்பனை நிலையங்கள், பெட்ரோல்-டீசல் இன்றி மூடப்பட்டு உள்ளன.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்..வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி தரும் அறிவிப்பு
காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
இதனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இத்தகைய கூடுதல் தேவையையும் சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல்-டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்திலும் தட்டுப்பாடு
தமிழகத்திலும் சில இடங்களில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தேனி, பெரியகுளம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலம் வரை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசலை விற்பனை நிலையங்களுக்கு வினியோகம் செய்த பிறகு, அதற்கான தொகையை குறிப்பிட்ட கால நேரத்தில் பெற்று வந்தன. இனி முன்பணம் செலுத்தும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன. இதுவும் தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது.
பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கடந்த சில நாட்களாக விற்பனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல்-டீசலுக்கு 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் விற்பனை நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை நடந்து வருகின்றன.
தேவை அதிகரிப்பு
இது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வினியோக தடைகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்து உள்ளது. விவசாய நடவடிக்கைகள், மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பெட்ரோல் பம்புகளுக்கு மாற்றியது மற்றும் தனியார் விற்பனை நிறுவனங்களில் வாங்குவோர் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொள்முதலை மாற்றியது போன்றவை காரணமாக இந்த தேவை அதிகரிப்பு நிகழ்ந்து உள்ளது. எனினும் நாட்டின் பெட்ரோல்-டீசல் உற்பத்தியானது தேவையை விட அதிக அளவுக்கு உள்ளது.
டேங்கர் லாரிகள் கூடுதலாக இயக்கம்
இதன் மூலம் எத்தகைய திடீர் தேவை அதிகரிப்பையும் சமாளிக்க முடியும். அதேநேரம் தற்போதைய திடீர் தேவை அதிகரிப்பு காரணமாக சில தற்காலிக தொழில்நுட்ப பிரச்சினைகளை உள்ளூர் மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எண்ணெய் நிறுவனங்கள், டெப்போக்கள் மற்றும் வினியோக மையங்களில் இருப்புகளை அதிகரித்தல், சில்லறை விற்பனை நிலைய சேவைக்காக டேங்கர் லாரிகளின் கூடுதல் இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படும்.
வேலை நேரம் நீட்டிப்பு
மேலும் டெப்போக்கள் மற்றும் வினியோக மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு மற்றும் தேவைப்படும் மாநிலங்களில் சப்ளை செய்வதற்கு கூடுதல் எரிபொருட்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தகவல் இதற்கிடையே பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் வெளியிட்டு உள்ளன.
கையிருப்பு உள்ளன.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் கட்டணங்கள் அதிகரிக்காததால், அரசுப் போக்குவரத்துக்கழகம் போன்ற மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதை விட பெட்ரோல் பம்புகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்கு காரணம் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கான பெட்ரோல்-டீசல் போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.