அரசிடமிருந்து வரவில்லை ஆர்டர்.. கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை பாதியாக குறைக்கிறது சீரம் நிறுவனம்
டெல்லி: இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கோவிஷீல்டு உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசிக்கான ஆர்டர்கள் அரசாங்கத்திடம் இருந்து வருவது நின்றுவிட்டதால், உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக சீரம் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தற்போதுள்ள தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக செயல்படாது என ஒதுக்கிவிட முடியாது என்றும் சீரம் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி இந்தியாவில் முதல் டோஸ் 80,26,81,922 போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 48,49,28,668 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1,28,76,10,590 டோஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் முதல் டோஸ் 23,52,319 இரண்டாவது டோஸ் 55,86,719 ஆக மொத்தம் 79,39,038 டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கோவிஷீல்டு உற்பத்தி குறைப்பு
கோவிட் -19க்கு எதிரான தடுப்பூசியான கோவிஷீல்டின் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம் "அரசாங்கத்திடம் இருந்து கோவிஷீல்டுக்கான ஆர்டர்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் முதல் உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார். மேலும் மீண்டும் அரசாங்கத்திற்கு தடுப்பூசி தேவைப்படும் பட்சத்தில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவதால் மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசி உற்பத்தி தொடரும் என தெரிவித்தார்.

மக்களை பாதிக்கக்கூடாது
மேலும் அடுத்த 6 மாதத்தில் திடீரென தடுப்பூசி தட்டுப்பாடு நிலவினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்பதற்காகவே தடுப்பூசி உற்பத்தி தொடர்வதாக தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் சுமார் 30 மில்லியன் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் போட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஆதார் பூனவல்லா மக்களுடைய பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என தெரிவித்தார். மேலும் தற்போதைய இரண்டு டோஸ் தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக செயல்படாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்த பூனவல்லா, தற்போதைய தடுப்பூசிகள் 80 சதவீதம் வரை கொரோனா வைரசுக்க எதிராக செயல்படக்கூடியது என தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவுடன் பேச்சுவார்த்தை
மேலும் தங்களுடைய தயாரிப்புகள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், இதற்காக பல்வேறு ஆப்பிரிக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பூனவாலா கூறினார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்கும் நோக்கத்துடன் கோவாக்ஸ் என்ற பெயரிலான கூட்டமைப்பு, உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய ஆணையம் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றால் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக இந்த தடுப்பூசிகள் தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications