கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையா, டி.கே.சிவகுமார் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சோனியா காந்தி
டெல்லி: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்ற பின்னரும் தற்போது வரை முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது இறுதி செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது கடந்த 2019ம் ஆண்டு திடீரென 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதன் காரணமாக ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது. மட்டுமல்லாது மாநில அளவில் கட்சி கடுமையாக பலவீனமடைந்தது. இதனையடுத்து அடுத்த தேர்தலில் எப்படியாவது தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற வேண்டும் என கட்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முயற்சி பலனையும் கொடுத்தது.

கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி கெத்து காட்டியது. ஆனால் இதற்கு பின்னர்தான் ரியல் சவால் காத்திருந்தது. அதாவது யார் முதலமைச்சராக பொறுப்பேற்பது என்பதுதான் இந்த சவால். கட்சி பலவீனமாக இருந்த காலத்தில் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் அதன் மாநில தலைவர் டி.கே.சிவகுமார். மட்டுமல்லாது இவர் சார்ந்து இருக்கும் ஒக்கலிகர் சமூகத்தினரின் ஓட்டுக்களும் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக கிடைத்திருந்தது.
வழக்கமாக இந்த சமூகத்தினரின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்குதான் செல்லும். இதனை காங்கிரஸ் பக்கம் மடைமாற்றி விட்டதில் சிவகுமாரின் பங்கு அளப்பரியது. அதேபோல அரசியலிலும் இவர் சீனியர்தான். எனவே இந்த விஷயங்களை சொல்லி தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மறுபுறம் சித்தராமையா அரசியலில் சூப்பர் சீனயர். ஏறத்தாழ 9 முறை எம்எல்வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மட்டுமல்லாது தனக்கு வயது 75 ஆகிறது. இனி நான் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அரசியலில் அதிகார பயணத்தை நான் இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டேன்.
எனவே இந்த ஒருமுறை எனக்கு முதலமைச்சர் பதவியை கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். இது தவிர காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களில் அதிகமானோர் இவருக்குதான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் என்ன செய்வதென்று கட்சி மேலிடம் குழம்பி வருகிறது. முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சி தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவுக்குதான் என்று ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், கார்கே மாநில தலைவர் சிவகுமாரையும், சித்தராமையாவையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆலோசனையில் "ஆட்சியை 2.5 ஆண்டுகளாக இரண்டாக பிரித்து கொடுக்கலாம்" என்று டி.கே.சிவகுமாரை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதில் முதல் 2.5 ஆண்டுகள் தனக்குதான் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை தனக்கு முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லையெனில் துணை முதலமைச்சர், நிதியமைச்சர் என எந்த பொறுப்பும் வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் ஒது சாதாரண எம்எல்ஏவாகவும் இருந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதில்தான் சிக்கல் இருக்கிறது.
இவருக்கு பதவி கொடுக்கவில்லையெனில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் சார்த்த ஒக்கலிகர் சமூகத்தினர் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும். மறுபுறம் சித்தராமையாவை தவிர்த்தால் எம்எல்ஏக்களின் அதிருப்தியை சமாளிக்க வேண்டி இருக்கும் எனவே கட்சி மேலிடம் குழம்பியுள்ளது. இந்நிலையில் விரைவில் முதலமைச்சரை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இன்று டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் ராகுல், பிரியங்கா, கர்கே, சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மட்டும் பங்கேற்ற இருக்கின்றனர். எனவே இதில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து விரைவில் பதவியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications