தென்மேற்குப் பருவக்காற்று நாளை பலமடையும்...ஜூன் 3ல் பருவமழை ஜோராகத் தொடங்க வாய்ப்பு
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் 3ஆம் தேதியன்று பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லி: தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல்.... என்ற அழகான பாடலைப் போல நாளை ஜூன் 1 முதல் பருவக்காற்று வலுவடையப்போகிறது. ஜூன் 3 முதல் கேரளாவில் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி பருவமழை தொடங்கி விடும் நடப்பாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் தாமதமாக தொடங்குகிறது.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக்காலமாகும். வழக்கமாக மே 20ஆம் தேதி அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி பருவமழை ஆரம்பிக்கும்.
நடப்பாண்டு அந்தமானில் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை வரும் 31ஆம் தேதியே தொடங்குவதற்கு சூழல் சாதகமாக நிலவுவதாக கடந்த வாரம் வானிலை மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவக்காற்று வலுவடையத் தொடங்கும் என்றும் ஜூன் 3 முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை மூலமாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவிகித வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.
நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும் இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, குமரி மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக அளவு மழை கிடைக்கும்.
பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்கிறது. இதேபோல் கர்நாடக கடற்கரையில் கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோமீட்டர் தொலைவிலும் கிழக்கு-மத்திய அரேபிய கடலுக்கு மேல் மேலடுக்கு சுழற்சி உள்ளது.
கேரளாவில் நாளை தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு மழைபொழிவு எப்படி இருக்கும்
தற்போது தென்மேற்கு காற்று பலம் அடையவில்லை. இதனால் பருவமழை தாமதமாகிவிட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் எம் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார். ஜூன் 1 முதல் தென்மேற்குப் பருவக்காற்று வலுவடைந்து ஜூன் 3 முதல் கேரளா மீது பருவமழை தொடங்கும் என்றும் எம் மொஹாபத்ரா கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே டவ்தே புயல், யாஸ் புயலால் பல மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. குமரி மாவட்டத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்த நிலையில் நாளை முதல் தென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுவென வீசத் தொடங்கப் போகிறது. தென் மாவட்ட மக்கள் மழையை அனுபவிக்க தயாராகுங்கள்.