தேசிய விளையாட்டு போட்டியில் மிஸ்ஸான தமிழக அணி.. மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்! அதிரடி
டெல்லி: டெல்லியில் நடக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி பங்கேற்காதது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இன்று பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டியில் டெல்லியில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து பல்வேறு அணிகள் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும்.

அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இதில் ஆர்வமாக இருப்பார்கள். மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் இந்த தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வுசெய்து போட்டிக்கு அனுப்புகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ம் தேதி டெல்லியில் தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.
இந்த போட்டியில் தான் தமிழகம் சார்பில் அணிகள் பங்கேற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகளின் அலட்சியம் என்றே கூறப்படுகிறது. அதாவது தேசிய போட்டியில் பங்கேற்க கூடிய மாணவ-மாணவிகளை அதிகாரிகள் தேர்வு செய்யவில்லை என்பது தான் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
லக்னோவிலிருந்து கடந்த மே மாதம் 11ம் தேதியே 247 மாணவர்களை அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் முதன்மை விளையாட்டு ஆய்வாளருக்கு சுற்றறிக்கை வந்திருக்கிறது. ஆனால் அவர் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இது தற்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில முன்னுரிமை அளிக்கப்படும். இதனால் தான் எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை விசாரைணயை தொடங்கியது.
இந்த விசாரணையின் அடிப்படையில் தான் தற்போது மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications