மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 1 கோடி தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன - மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: மாநில அரசுகளிடம் இன்னும் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 16 கோடியே 33 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தினசரியும் 4 லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது.
60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் அதற்காக முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்தது. இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி மருந்து பற்றாக்குறையால் பல மாநிலங்களில் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இப்போதைக்கு வாய்ப்பில்லை - பல மாநிலங்கள் அறிவிப்பு
இந்த நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 33 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவற்றில் சேதம் உட்பட 15 கோடியே 33 லட்சத்திற்கு அதிக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளிடம் இன்னும் ஒரு கோடிக்கும் அதிக தடுப்பூசிகள் இருப்பதாகவும் அடுத்த 3 நாட்களுக்குள் 20 லட்சம் டோஸ்கள் மாநிலங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்துக்கு இதுவரை 65 லட்சத்து 28 ஆயிரத்து 950 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 8.83 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 62 லட்சத்து 97 ஆயிரத்து 671 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க முடியாது என்று தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் தெரிவித்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.