‘அழுத்தம் திருத்தமாக பேசிய நிர்மலா சீதாராமன்’ எப்ப சார் ஆக்ஷன் எடுப்பீங்க? - சு.வெங்கடேசன் கேள்வி!
டெல்லி : லோக்சபாவில் முதலைக் கண்ணீர் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகப் பயன்படுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு இரு அவைகளிலும் பேசக்கூடாத வார்த்தைகளின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு. அதில், அரசை விமர்சிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இதனால், எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், அரசு பேசக்கூடாத வார்த்தை எனக் குறிப்பிட்ட வார்த்தையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த வார்த்தைகளைப் பேசக்கூடாது
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியானது. அதன்படி, வெட்கக்கேடு, துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி, ரத்தக்களறி, நாடகம், கபடநாடகம், திறமையற்றவர், அராஜகம் செய்பவர், மோசக்காரர், லாலிபாப், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, கொடூரமானவர், ஏமாற்றினார், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட பல வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

லோக்சபாவில் கடுமையான விவாதம்
இந்நிலையில், நேற்று முன் தினம் நாடாளுமன்ற லோக்சபாவில் , விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடந்தது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகள், குற்றச்சாட்டுகளுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளிக்கிறேன் என்று கூறி பேசினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

முதலைக் கண்ணீர் வடிக்கும் கதை
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைப்போம். காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் தருவோம் என்று, 2021-ல் தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. ஆனால், சொன்னபடி விலையை குறைக்கவில்லை. இதுபற்றி தி.மு.க அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டபோது, எப்போது குறைப்போம் என தேதியை சொன்னோமா? என்று பதில் அளித்தார். மத்திய அரசு விலையை குறைக்கும். ஆனால், நாங்கள் குறைக்க மாட்டோம் என்று முதலைக் கண்ணீர் வடித்த கதை இது எனப் பேசினார்.

பேசக்கூடாத வார்த்தை
முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசக்கூடாதது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய நிதி அமைச்சரே 'முதலைக் கண்ணீர்' என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மதுரை மக்களவை தொகுதியின் எம்.பி சு.வெங்கடேசன் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சபாநாயகரை மென்ஷன் செய்து
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "முதலைக்கண்ணீர் என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த சொல்லை அழுத்தம் திருத்தமாக பயன்படுத்தினார். இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?" என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை மென்ஷன் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications