பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணத்தில் சந்தேகம்: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க சு.சுவாமி கோரிக்கை
டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.
பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் டெல்லியில் இருந்து தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேற்று பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே மலைமுகட்டில் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பிபின் ராவத் உட்பட 13 பேர் பலி
இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை நடத்த உத்தரவு
மோசமான வானிலையால் விபத்து நிகழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நிகழ்ந்ததா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்ப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் இதனை அறிவித்திருந்தார்.

சு.சுவாமியின் சீனா சந்தேகம்
ஆனால் பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணம் குறித்து நேற்று முதல் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் எழுப்பி வருகிறார். இதுவரை இல்லாத வகையில் எல்லைகளில் சீனாவின் ஊடுருவல் குறித்து மிக அதிகமான கருத்துகளை முன்வைத்தவர் பிபின் ராவத்; ஆகையால் அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றார் சு.சுவாமி. யூ டியூப் சேனல் ஒன்றுக்கு இது தொடர்பாக பேட்டியளித்த சு.சுவாமி, சைபர் வார்ஃபேர் இந்த விபத்தின் பின்னணியில் இருந்திருக்கலாம்; லேசர் மூலமாக தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
Recommended Video

நீதிபதி விசாரிக்க கோரிக்கை
இதனைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் பிபின் ராவத் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி பதிவிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. மேலும் ராணுவம் விசாரணை நடத்துவதை விட வெளியில் இருந்து அதாவது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications