15 நிமிடம் சூரிய வெயிலில் நில்லுங்க.. கொரோனா செத்து போகும்.. சொல்வது மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார்
டெல்லி: சூரிய வெயிலில் 15 நிமிடம் நின்றாலே போதும்.. கொரோனா வைரஸ் செத்து போய்விடும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 200ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே வலதுசாரிகள் பசு கோமியத்தை குடித்தால் போதும்.. உடனே கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று கூறி கோமியம் குடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் பசு சாணியை பயன்படுத்துவதாலும் கொரோனா தாக்காது என்கின்றனர்.
வலதுசாரிகளின் இந்த சேட்டைகளால் பொதுமக்கள் கடும் எரிச்சலடைந்துள்ளனர். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனாவை கட்டுபடுத்த அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கே பழமைவாதிகள் இப்படியான கருத்துகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருவது நகைப்புக்குரியதானது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் தெரிவித்திருக்கும் கருத்தும் சர்ச்சையாகி உள்ளது. அதாவது சூரிய வெயிலில் 15 நிமிடம் நின்றாலே போதும்.. கொரோனா வைரஸ் செத்து போய்விடும் என கண்டுபிடித்திருக்கிறார். அதாவது சூரிய ஒளியில் வைட்டமின் டி சக்தி இருக்கிறது; அதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது கொரோனாவை கொல்லும் என்கிறார் அஸ்வினி குமார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி குமாரின் இந்த அறிவார்ந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஸ்வினி குமாரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.