"அதிகார வரம்பு என்ன?" தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில்.. சுப்ரீம் கோர்ட் கேட்ட 5 முக்கிய கேள்விகள்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் எனக் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது நீதிபதிகள் சில முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்று அரசு தரப்பில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

தமிழக அரசு வழக்கு:
கடந்த 2023ம் ஆண்டு இது தொடர்பாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் ஆளுநர் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் தமிழக அரசு கோரியிருந்தது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளில் குறுக்கீடு உள்ளிட்டவற்றையும் தமிழக அரசு சுட்டிக்காட்டி இருந்தது.
இந்த வழக்கு குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது ஆளுநர் ஆர் என் ரவி அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட தமிழ்நாடு அரசு, அது தொடர்பான வாதங்களை முன்வைத்தது.. தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதங்களை முன்வைத்தார்.
5 மேஜர் கேள்விகள்:
வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
1) சட்டசபையில் ஒரு மசோதாவை நிறைவேற்றி, அதை ஆளுநரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது, அதை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார். இதனால் சட்டசபை மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பும் போது, அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப ஆளுநரால் முடியுமா? குறிப்பாக, முதலாம் முறை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாத நிலையில், இரண்டாவது முறை மட்டும் அனுப்பலாமா?
2) ஆளுநர் நினைத்தால் எந்தவொரு மசோதாவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியுமா.. இல்லை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்படாத மசோதாக்களை மட்டும் ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியுமா?
உச்ச நீதிமன்றம் கேள்வி:
3) குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாவை அனுப்ப ஆளுநர் முடிவெடுக்கும்போது, அவர் எதற்கு முக்கியத்துவம் அளித்தார்?
4) முதலாம்முறை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பப்படும் போது, அதைத் திருப்பி அனுப்பச் சொல்லி ஆளுநருக்குக் குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கிறார். அப்போது மீண்டும் இரண்டாவது முறை அதே மசோதாவைச் சட்டசபை நிறைவேற்றி, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டால் எதன் அடிப்படையில் குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்?
நிறுத்தி வைக்க முடியுமா?
5) இதுபோல மீண்டும் இரண்டாவது முறையாக மறுபரிசீலனைக்காக அனுப்பும் போது அதற்குக் குடியரசுத் தலைவர் கட்டாயமாக ஒப்புதல் அளிக்க வேண்டுமா? அல்லது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 201க்கு கீழ் அதைக் குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்க முடியுமா?
இதுபோல ஐந்து முக்கிய கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர். தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இந்த வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications