பலாத்காரத்திற்குள்ளான பெண்களுக்கு "இரு விரல்" பரிசோதனை செய்ய கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரு விரல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் தண்டனையை உறுதிப்படுத்திய நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஹீமா கோஹ்லி இவ்வாறு தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை தெலுங்கானா உயர்நீதிமன்றம் ரத்து செய்து குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இரு விரல் பரிசோதனை குறித்தும் நீதிபதிகள் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அறிவியல் பூர்வம் இல்லை
அப்போது நீதிபதிகள் கூறுகையில் "பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரு விரல் பரிசோதனை என்பது இன்னமும் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. பாலியல் பலாத்காரத்தால் அதிர்ச்சியில் உள்ள பெண்ணை மேலும் தொல்லைப்படுத்த நடத்தப்படும் இந்த இரு விரல் பரிசோதனை அறிவியல் பூர்வமானது இல்லை. பெண்களையும் அவர்களது மனதையும் மீண்டும் காயப்படுத்துவது மட்டுமே இந்த சோதனையாகும்.

பாலியல் பலாத்கார வழக்கு
பாலியல் பலாத்கார வழக்குகளில் இரு விரல் பரிசோதனையை பயன்படுத்துவதை இந்த உச்சநீதிமன்றம் தற்போது மீண்டும் நிராகரிக்கிறது. பாலியல் செயலில் ஈடுபடும் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என தவறான அனுமானத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. பாலியல் பாதிப்புக்குள்ளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்து கொள்ள இது போன்ற சோதனை நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது.

ஆணாதிக்க சிந்தனை
இந்த சோதனை ஆணாதிக்க சிந்தனை மற்றும் வக்கிர மனோபாவம் கொண்டது. இது பெண்களை மனரீதியாக பாதிக்கிறது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய, மாநில சுகாதாரத் துறையினர் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இரு விரல் சோதனைக்கு தடை
இந்த சோதனையை நடத்தும் நபர்கள் குற்றவாளிகளாக நேரிடும் என்பதையும் இந்த அமர்வு எச்சரித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுக்கு பின்னர் இந்த இரு விரல் பரிசோதனை முறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. இதுகுறித்து அப்போதைய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது யாதெனில் " இரு விரல் பரிசோதனை என்பது பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட உரிமையை மீறும் செயலாகும். அவர்களின் கண்ணியத்தையும் இந்த பரிசோதனை குலைக்கிறது. இந்த முறையானது மருத்துவ ரீதியாக பயன் இல்லாதது. எனவே இந்த பரிசோதனையை உபயோகிக்கக் கூடாது" என 2013 இல் தெரிவித்திருந்தது. இதைத்தான் தற்போது நீதிபதிகள் சுட்டிக் காட்டி மீண்டும் நிராகரிக்கிறோம் என கூறியுள்ளார்கள்.

பெண்களின் கன்னித்தன்மை
இரு விரல் பரிசோதனை என்பது பெண்களின் பிறப்புறுப்புக்குள் இரு விரல்களை செலுத்தி அவர்களது கன்னித்திதை கிழியாமல் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து சோதனையாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுபடி கன்னித்திரை உள்ளதா இல்லையா என பார்ப்பதாலேயே ஒரு பெண் உடலுறவு கொண்டாரா இல்லையா என்பதை நிரூபிக்க முடியாது. உடலுறவினால் மட்டுமே கன்னித்திரை கிழியும் என்பது அனுமானம் என கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications