ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்க உள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் வெடித்தது. பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் 28ஆம் தேதி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்ததையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என கூறி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தாவும் வழக்கு தொடர்ந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை, இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.












Click it and Unblock the Notifications