நகரங்கள், தேர்வு மையம் வாரியாக நீட் முடிவுகளை சனிக்கிழமைக்குள் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம்
டெல்லி: நீட் தேர்வு முடிவுகளை மதிப்பெண் அடிப்படையில் நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நாளை மறுநாள் (அதாவது ஜுலை 20, சனிக்கிழமை) மதியத்துக்குள் தேசியத் தேர்வு முகமை வெளியிட வேண்டும்; நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் போது மாணவர்கள் குறித்த விவரங்கள் இடம் பெறக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தேர்வு மையம் வாரியாக முடிவுகளை வெளியிட மத்திய அரசு தெரிவித்த எதிர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22-ந் தேதி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஜூலை 24-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது பற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இன்றைய விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம், நீட் தேர்வு நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக நாளை மறுநாள் (ஜுலை 20) மதியத்துக்குள் முடிவுகளை மதிப்பெண் அடிப்படையில் வெளியிட வேண்டும். அப்படி முடிவுகளை வெளியிடும் போது மாணவர்களின் விவரங்கள் அதில் இடம் பெறக் கூடாது என உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22-ந் தேதி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஜூலை 22-ந் தேதி பிற்பகலுக்குள் அனைத்து தரப்பு விசாரணைகளையும் நிறைவு செய்துவிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகள் என்பவை சமூக சீர்கேடுகள் விவகாரம். இதனால்தான் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் தருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை பல லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கு விசாரணையை இன்றே நடத்துகிறது உச்சநீதிமன்றம்.
நீட் வினாத்தாள் கசிவு, விற்பனை என்பது ஒட்டுமொத்தமாக மாணவர்களை எந்தெந்த வகைகளில் பாதித்துள்ளது என்பதை மனுதாரர்கள் விரிவாக விவரிக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பாதிப்பு என உறுதியாக தெரிந்தால்தான் மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட முடியும். இல்லை எனில் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனவும் இன்றைய விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications