கள்ளக்குறிச்சி மாணவி தந்தை மனு தள்ளுபடி.. ‘நீங்க சொல்ற டாக்டரை ஏன் நியமிக்கணும்?’ நீதிபதிகள் கேள்வி!
டெல்லி : கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் தந்தையின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கக் கோரிய மாணவியின் தந்தை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீங்கள் கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் கூறிய நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன.

மறு உடற்கூறாய்வு
இதற்கிடையே மாணவியின் தந்தை, தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாணவியின் தந்தை
மாணவி உடலுக்கு மறு உடற் கூறாய்வு நடத்தும் குழுவில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவரையும் சேர்க்கக் கோரி மாணவியின் தந்தை தரப்பில் முறையிடப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

நடத்த அனுமதி
இதையடுத்து மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீது நம்பிக்கை இல்லையா என மனுதாரர் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் மறு உடற்கூறு ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மறு உடற்கூறாய்வு நடந்தது.

சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரிய மாணவியின் தந்தை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக மாணவியின் தந்தைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் கேள்வி
நீங்கள் கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உரிய முறையில் அரசு செயல்படவில்லை, நியாயமான விசாரணையை நடத்தவில்லை என மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார். அதற்கு, உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே எனக் கேள்வி எழுப்பினர்.

வீடியோ பதிவு
அரசுத் தரப்பில் அளித்த விளக்கத்தில், மறு உடற்கூறாய்வு குறித்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு உரிய நேரத்தில் தரப்பட்டது மறு உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தளுப்படி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை பகல் 2 மணிக்குள் பெற்று, நல்லடக்கம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications