ஆனந்த் டெல்டும்டே ஜாமீனை எதிர்த்து வழக்கு.. என்ஐஏ மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து என்ஐஏ (NIA) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
'பீமா கோரேகான்-எல்கர் பரிஷத்' வழக்கில் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து சிறையில் இருக்கும் டெல்டும்டேவுக்கு கடந்த கடந்த 18ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு என்ஐஏவுக்கு சரமாரியாக கேள்வியெழுப்பி இறுதியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

வன்முறை
கடந்த 2018ம் ஆண்டு புனேவில் உள்ள பிமா கோரேகான் எனும் பகுதியில் பெரிய அளவில் தலித் சமூகத்தினர் அணிதிரண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி-மராட்டியர்கள் போரின் 200வது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடினர். அப்போது இந்த பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக 'எல்கர் பரிஷத்' எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்வுதான் அடுத்த நாள் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் என மகாராஷ்டிரா காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு மாநில காவல்துறையிடமிருந்து என்ஐஏ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு.

என்ஐஏ
வழக்கை விசாரித்த என்ஐஏ 10 ஆயிரம் பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் மாவோயிஸ்ட் அமைப்புதான் இந்த கலவரத்திற்கு காரணம் என்றும், எல்கர் பரிஷத் கூட்டத்தை நடத்தியது இவர்கள்தான் எனவும் குறிப்பிட்டு இடதுசாரி ஆதரவாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமாகிய 16 பேரை கைது செய்தது. அப்படி 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் (UAPA) கைது செய்யப்பட்டவர்தான் ஆனந்த் டெல்டும்டே. டாக்டர் அம்பேத்கரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான இவர் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ஆதாரங்கள்
இவ்வாறு இருக்கையில், இவருக்கு கடந்த 18ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து என்ஐஏ உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. என்ஐஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதி, மாவோயிஸ்ட் அமைப்புடன் டெல்டும்டே தொடர்பில் இருப்பதற்கான ஆதாரங்களை முன்வைத்தார். ஆனந்த் டெல்டும்டே தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த குற்றச்சாட்டை மறுத்து இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் ஆனந்த் டெல்டும்டேவிடமிருந்து கைப்பற்றப்படவில்லை என்று விளக்கமளித்தார்.

30 ஆண்டுகள்
மேலும் இந்த ஆவணங்கள் அனைத்தும் இணை குற்றவாளியான ரேனா வில்சனின் கணினியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கபில் சிபல் விளக்கமளித்தார். இதனையடுத்து ஐஸ்வர்யா பதி, "ஆனந்த் டெல்டும்டேவின் சகோதரர் மிலிந்த் டெல்டும்டேவுடன், ஆனந்த் டெல்டும்டே தொடர்பில் இருந்திருக்கிறார். மிலிந்த் ஒரு மாவோயிஸ்ட் கூட்டத்தின் தலைவராவார். இவர் கடந்த ஆண்டு பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டிருந்தாலும் அவர் சார்ந்த கூட்டத்தினருடன் இவர் தொடர்பில் இருந்திருக்கிறார்" என்று குற்றம்சாட்டினார். இதற்கும் மறுப்பு தெரிவித்த கபில் சிபல், "கடந்த 30 ஆண்டுகளாக மிலிந்தை, ஆனந்த் டெல்டும்டே பார்க்கவே இல்லை" என்று கூறினார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் செவி வழியாக வந்த தகவல்களை கொண்ட ஆதாரங்கள் என்றும் கூறினார்.

கடிதம்
தொடர்ந்து விளக்கமளித்த கபில், "பயங்கரவாத நடவடிக்கையில் ஆனந்தை இணைக்க எந்த ஆதாரமும் இல்லையென உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இவர் எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் கூட பங்கேற்கவில்லை. அதற்கான ஆதாரங்களை என்ஐஏ காட்டவில்லை" என்று கூறினார். உடனே என்ஐஏ அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தது. அதில், தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மவோயிட்ஸ்ட்) அமைப்பின் மத்திய குழு ஆனந்த் டெல்டும்டேவுக்கு எழுதிய கடிதத்தை ஆதாரமாக காட்டியது.

சரமாரி கேள்வி
கடிதம், அன்புள்ள தோழர் ஆனந்த் என்று தொடங்குவதையும் சுட்டிக்காட்டியது. இந்த கடிதம் மூலம் ஆனந்த் டெல்டும்டே நக்சல்பாரி இயக்கத்தின் மாணவர்களுக்கு விரிவுரையாற்றியிருக்கிறார் என்று தெரிய வந்திருப்பதாகவும் என்ஐஏ குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் கபில் சிபல் விளக்கமளித்தார். பின்னர் தடை செய்யப்பட்ட இலக்கியங்களை விரிவுரைகள் மூலம் பகிர்ந்துகொள்வதாக அடுத்த குற்றச்சாட்டை என்ஐஏ முன்வைத்தது. தொடர் குற்றச்சாட்டுகளை கவனித்த தலைமை நீதிபதி, "பயங்கரவாத தடை சட்டத்தை ஆனந்த் டெல்டும்டே மீது போடும் அளவுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?" என்று கேள்வியெழுப்பினார். மேலும், "மெட்ராஸ் ஐஐடியில் அவர் தலித்துகளை அணிதிரட்டுகிறார் என்று கூறினீர்கள். பயங்கரவாத தடை சட்டத்தை போடுவதற்கு தலித் அணிதிரட்டல்தான் காரணமா?" என்றும் கேள்வியெழுப்பினார். இந்த விவாதங்களின் இறுதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி என்ஐஏவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications