வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு- அமைச்சர் ஐ.பெரியசாமி அப்பீல் மனு டிஸ்மிஸ்- உச்சநீதிமன்றம்
டெல்லி: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கை அமைச்சர் ஐ.பெரியசாமி எதிர்கொள்ளவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் இருந்தார் ஐ.பெரியசாமி. ஆனால் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கூட்டுறவு துறை மட்டும் ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கப்பட்டதில் தொடக்கம் முதலே அவர் அதிருப்தியாக இருக்கிறார் என்பது ஊடக செய்திகள்.
இதனால் ஒவ்வொரு முறையும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திகள் வலம் வருகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முக்கியமான இலாகா மீண்டும் வழங்கப்படும் என்கிற தகவலும் சேர்ந்தே வெளியாகும். தற்போதும் டிசம்பர் 14-ல் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகிறார்; அப்போது ஐ.பெரியசாமிக்கு கூடுதலாக மற்றொரு இலாகா கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வீட்டு வசதி வாரிய வழக்கு
ஐ.பெரியசாமி தரப்பை மகிழ்ச்சிப்படுத்துகிற இந்த செய்திகள் வெளியாகி இருக்கும் நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பேரிடியாக கிடைத்திருக்கிறது. 2008-ம் ஆண்டு வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி. அவரது பதவி காலத்தில் முன்னாள் டிஜிபியும் உளவுத்துறை ஐஜியாக இருந்தவருமான ஜாஃபர் சேட் மனைவிக்கு சமூக சேவகர் என்ற கோட்டாவில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கருக்கும் நிலம் ஒதுக்கப்பட்டது. இது முறைகேடாக ஒதுக்கப்பட்டது என்பது வழக்கு. மேலும் அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் வணிக வளாகம் கட்டியது, சட்டவிரோத வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது என ஜாஃபர் சேட் மனைவி மீது அமலாக்கத்துறை வழக்கும் பதிவு செய்தது. இந்த வழக்குகளில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

வழக்கு விவரம் என்ன?
அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேர் மீது 2013-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பதிவு செய்வதற்கு மத்திய அரசின் அனுமதி பெறாத காரணத்தை முன்வைத்து ஜாஃபர் சேட் மற்றும் வீட்டுவசதி வாரியத்தின் செயல் பொறியாளர் முருகையா மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
தங்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 4 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் கடந்த மாதம், வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி 4 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்
இதனை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை அவர் சந்திக்கவும் உத்தரவிட்டது. இது அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications