யூடியூபில் ஆபாச விளம்பரம்.. படிப்பு கெடுவதாக கேஸ் போட்டவருக்கு 25,000 அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: யூடியூபில் வரும் ஆபாச விளம்பரங்கள் தன்னுடைய படிப்புக்கு தடையாக இருப்பதாக கூறி காவல்துறையில் சேர பயிற்சி பெற்று வரும் இளைஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் அவரை கண்டித்து மனுவை தள்ளுபடி செய்து ரூ.25,000 அபராதத்தை விதித்திருக்கிறது.
பொது இடங்களில் நாம் இணையதளங்களை உபயோகப்படுத்தும்போது பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பாக ரயில் பயணத்திலோ, பேருந்து பயணத்திலோ நாம் இணையத்தை உபயோகிக்கும்போது தெரியாமல் எதையாவது தொட்டுவிட்டால் அது 'பலான' படத்துக்கான வெப்சைட்டில் நம்மை கொண்டு நிறுத்தி விடும்.
இதை பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பார்த்துவிடுவார். அவர் பார்ப்பதற்குள் இதிலிருந்து வெளியேறுவது என்பது இணையத்தை சரளமாக பயன்படுத்துபவர்களால் மட்டும்தான் முடியும். மற்றவர்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.
தேவையில்லாததை யூடியூபில் பேசுவது இப்போ ஃபேஷனாகிவிட்டது.. கனல் கண்ணனுக்கு நீதிபதி குட்டு
யூடியூப்
இது ஒருபுறம் எனில் மற்றொருபுறம் யூடியூப். நாம் தேடியதை பார்ப்பதற்குள் இரண்டு விளம்பரங்கள் குறுக்கே வந்துவிடும். இத்தனைக்கும் நாம் எதையாவது அவசரமாக தேடினால் அப்போதுதான் NON STOP ADD 60 செகன்ட் வரை ஓடிக்கொண்டிருக்கும். நாம தேட வந்ததே 10-20 செகன்ட் இருக்குற விஷயமாகதான இருக்கும். ஆனால் அதுக்கு 60 செகன்ட் வரை காத்திருப்பதில்தான் எல்லோரும் எரிச்சலைகிறோம். ஆக இப்படியாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தான் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வருவதாகவும், ஆனால் இது தொடர்பான வீடியோக்களை யூடிபில் பார்க்க போனால் இடையே அதிக விளம்பரங்கள் வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆபாச விளம்பரங்கள்
மேலும், "இந்த விளம்பரங்கள் சாதாரண விளம்பரங்கள் அல்ல, இவைகள் ஆபாச விளம்பரங்களாக இருக்கின்றன. எனவே இதானல் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி எனது தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறேன். இந்த தவிப்பு காரணமாக கூகுளின் யூடியூப் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இழப்பீடாக ரூ.75 லட்சத்தை பெற்று தர வேண்டும். மேலும் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்கள் எதுவும் வெளியாகக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. முதலில் மனுவை பார்த்தவுடன் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மழுப்பல்
பின்னர் மனுதாரரிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதாவது, "இந்த விளம்பரத்தினால்தான் உங்கள் கவனம் சிதறியதா? உங்களுடைய தேர்வு இதானல்தான் பாதிக்கப்பட்டதா? எனவே விளம்பரங்களை பார்த்ததற்காக இழப்பீடு கோருகிறீர்கள் இல்லையா? சரி இம்மாதிரியான விளம்பரங்கள் வரும் வீடியோக்களை நீங்கள் ஏன் தேர்வு செய்கிறீர்கள்? உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லையெனில் விட்டு விடுங்கள். மீண்டும் அதை நோக்கியே ஏன் போகிறீர்கள்?" என்று கேள்வியெழுப்பினர். இதற்கு மனுதாரர் தர்ப்பிலிருந்து எந்த பதிலையும் கொடுக்க முடியவில்லை. மழுப்பலான பதில்கள்தான் வந்தன.
மன்னிப்பு
இதனையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், "இந்த மனு அரசியல் அமைப்பு சட்டம் 32ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மிக கொடூரமான மனுக்களில் ஒன்று. மட்டுமல்லாது இது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கவே தாக்கல் செய்யப்பட்டிருகிறது. இனி இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். எனவே மனுதாரருக்கு ரூ.1 லட்சத்தை அபராதமாக விதிக்கிறோம்" என்று கூறி உத்தரவிட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மனுதாரர் இந்தியில் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்ச தொடங்கிவிட்டார். தனக்கு வேலை இல்லை என்றும் இதனால் இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது எனவும் ஆகவே அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதனையடுத்து அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக நீதிபதிகள் குறைத்துள்ளனர். இந்த வழக்கு தற்போது பேசுபொருளாகியுள்ளது.