சட்டவிரோதமாக ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டாலும்.. 'புல்டோசர்'களுக்கே அதிரடி தடை விதித்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: குற்றம்சாட்டப்பட்டவர்களின் கட்டிடங்களை அனுமதி இல்லாமல் புல்டோசர்கள் மூலம் இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அக்டோபர் 1-ந் தேதி வரை அதிரடி இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டாலும் அரசமைப்பு சட்டத்தின் அறத்துக்கு எதிரானதுதான் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் சம்பவங்களில் குற்றம்சாட்டப்படுகிறவர் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களை உடனடியாக புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய புல்டோசர் கலாசாரம் சிறுபான்மையினரிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டோரின் கட்டிடங்களை உடனே புல்டோசர் மூலம் இடித்து தள்ளும் நடவடிக்கைகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே ஒருவர் குற்றம்சாட்டப்பட்டு விட்டாலே உடனே அவரது கட்டிடங்களை புல்டோசர்கள் மூலம் இடிப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்தால் கூட ஒருவரது கட்டிடத்தை இடித்துத் தள்ள முடியாதே? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களின் கட்டிடங்கள் மட்டுமே இடித்து தள்ளப்படுவதாக மனுதாரர் தரப்பு குறிப்பிடுவதை அரசு தரப்பு நிராகரித்து வாதிட்டது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அக்டோபர் 1-ந் தேதி வரை புல்டோசர்கள் மூலம் கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், சட்டவிரோதமாக ஒரு கட்டிடம் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டாலும் அரசியல் சாசனத்தின் அறத்துக்கே அது எதிரானதும் எனவும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். அதேநேரத்தில் சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்டவைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ள எந்த தடையும் இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications