சனாதனதர்மம் ஒழிப்பு பேச்சு-உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி தடை
டெல்லி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதியதாக வழக்குகள் பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது இந்த விவகாரத்தில் தங்களது அனுமதி இல்லாமல் வழக்கு பதிவு செய்யக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023-ம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனாவை பரப்பக் கூடிய வைரஸ் போன்றது; அதை ஒழித்தே ஆக வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு சில இந்துத்துவா தீவிரவாதிகள் விலையும் வைத்து அவரது தலையை வெட்டவும் உத்தரவிட்டனர். மேலும் வட இந்தியாவின் பல மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.
வட இந்தியாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களின் போது பாஜகவினர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை விமர்சித்தே இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கவும் செய்தனர்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும்; அந்த நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சீவ் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இனி புதிய வழக்குகள் எதனையும் பதிவு செய்யக் கூடாது என அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்வதற்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.












Click it and Unblock the Notifications