விஆர்எஸ் கொடுத்த மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்- ஆவணங்களை கேட்கும் சுப்ரீம்கோர்ட்
டெல்லி: விருப்ப ஓய்வு பெற்ற மறுநாலே தேர்தல் ஆணையரான அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக அருண் கோயல் பணியாற்றி வந்தார். 37 ஆண்டுகள் மத்திய அரசு பணியில் இருந்தார். கடந்த 18-ந் தேதியன்று தமது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் அருண் கோயல்.
அருண் கோபால் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே நாட்டின் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய சீர்திருத்தம் கோரிய வழக்கை நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விசாரித்து வருகிறது. அப்போது, அருண் கோயல் நியமன விவகாரமும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டதில் தவறு ஏதும் இல்லை என்றனர்.
'வணங்காமுடி'.. டி.என். சேஷனை போல.. ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் வேண்டும்.. உச்ச நீதிமன்றம் கருத்து
ஆனால் நீதிபதிகளோ, தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையில் சுதந்திரமான நடைமுறை தேவை. கொலிஜியம் போல ஒரு முன்மாதிரியான தேர்வு குழுவை உருவாக்குவது தேவையாக உள்ளது என்றனர். அதுவும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் இத்தகைய நியமனங்கள் எப்படி சரியானது எனவும் நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.
அத்துடன் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் நியமிக்கப்பட்டது எப்படி? இது தொடர்பான நடைமுறைகள், ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர் நீதிபதிகள். தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.