செந்தில் பாலாஜியை விடாமல் விரட்டும் பண மோசடி வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது?
டெல்லி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜ கடந்த, 2011 முதல் 2015ஆம் ஆண்டுவரை அதிமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2015ஆம் ஆண்டு ஜூலையில் அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பதவியிலிருந்தும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நீக்கினார்
கடந்த 2014ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் அசோக்குமார், தனி உதவியாளர் சண்முகன் மற்றும் எம்டிசி ஊழியர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத பண பரிமாற்றம்..செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்து..ஹைகோர்ட் உத்தரவு
செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, எம்டிசியில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மெக்கானிக் பணியில் சேர விரும்பிய நபர்களிடம் பெரும் தொகையை பாஸ்கர் மற்றும் சக ஊழியர்கள் பழனி, கேசவன் மற்றும் பலர் சேர்ந்து வசூலித்து ஏமாற்றியுள்ளனர். தேவசகாயம் என்பவரின் மகனுக்கு பேருந்து நடத்துனர் பணிக்காக ரூ.2,60,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஊழல் வழக்கு
இந்த ஊழலில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் 2016ஆம் ஆண்டு அளித்த புகாரின்படி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் மற்றும் மைத்துனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ரூ.2.31 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஏப்ரல் 2019 இல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வேலை வாங்கி தருவதாக 40 லட்சம் ரூபாய் வசூலித்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கிரிமினல் வழக்கு ரத்து
பின்னர் ஏமாற்றப்பட்டவர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர், பின்னர் 2021 இல், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் பணம் செலுத்தும் சர்ச்சையை சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர். சமரசம் மற்றும் சண்முகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கிரிமினல் வழக்கை ரத்து செய்தது.
புகார்கள் வாபஸ்
திமுக ஆட்சியில்மீண்டும் அமைச்சரானதும், புகார்கள் வாபஸ் பெறப்பட்டது. இது சர்ச்சையானது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையின் அறிக்கையை ஏற்று, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதியன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் தனக்கு அரசு வேலை வழங்காமல், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க தகுதிப் பட்டியலில் சேர்த்திருந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் அமைச்சரின் தனி உதவியாளர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்தது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், பிசி சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை ரத்து செய்வதற்கு கட்சிகளுக்கு இடையே சமரசம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளை மீறி உயர்நீதிமன்றம் செயல்பட்டதாக கூறினார். விஸ்வநாதன், வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் வாதிட்டபோது, ரத்து செய்யப்பட்ட வழக்கில் பல விண்ணப்பதாரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், போக்குவரத்து அமைச்சரின் உத்தரவின் பேரில் தகுதிப் பட்டியலை மாற்றியதால், தகுதியுடைய மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை இழந்தனர் என்று குறிப்பிட்டனர்.
தீர்ப்பு தள்ளி வைப்பு
தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, சண்முகன் மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஏன் திரும்பப் பெறவில்லை என்பதை காரணம் காட்டுமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. எதிர் மனுதாரரான பி. சண்முகம், அருள்மணி, தமிழக அரசு அதாவது சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தள்ளி தள்ளி வைத்தனர். வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாத விவாதங்களும் முடிவடைந்துள்ளன. தீர்ப்பினை நீதிபதிகள் தேடி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.