அதிமுக அலுவலக சாவி வழக்கு.. தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு! இபிஎஸ், வருவாய்த் துறைக்கு நோட்டீஸ்
டெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் வருவாய்த் துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video
அதிமுகவில் கடந்த இரு மாதங்களாக இரட்டை தலைமைகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. இது கடந்த ஜூன் 23 ஆம் தேதி பூதாகரமாக வெடித்தது. அன்றைய தினம் ஓபிஎஸ், எடப்பாடி ஆதரவாளர்களால் மோசமான நிலையில் அவமானப்படுத்தப்பட்டார்.
பொதுக்குழுவுக்கு அவர் வந்த பிரச்சார வாகனம் பஞ்சராக்கப்பட்டது. அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் கொண்டு வந்த 23 தீர்மானங்கள் அனைத்தும் அன்றைய தினம் நிராகரிக்கப்பட்டதாக பொதுக் குழு அறிவித்தது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை! சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தீவிர ஆலோசனை.. மாஜிக்கள் பங்கேற்பு!
ஒற்றைத் தலைமை
இதையடுத்து ஒற்றைத் தலைமை குறித்த புதிய தீர்மானம் ஜூலை 11 ஆம் தேதி கூட்டி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தது. ஓபிஎஸ்ஸின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை வெடித்தது. அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ்ஸும் ஆதரவாளர்களும் உள்ளே சென்றனர். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கிருந்த ஓபிஎஸ் பேனரை கிழித்தனர்.
வட்டாட்சியர்
இதையடுத்து வட்டாட்சியர் சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சொந்தம் கொண்டாடி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி
அதில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன் ஒரு மாதத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமை அலுவலகத்திற்கு செல்லக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வங்கிக் கணக்குகள்
அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் உரிமையும், அலுவலக சாவியும் எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு சென்றதால் ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் கூறுகையில், நான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அதிமுக தலைமை அலுவலக அதிகாரம் எனக்குத்தான். பொதுக் குழு வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. அப்போது அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.