எஸ்பி வேலுமணி வழக்கு:லஞ்ச ஒழிப்புத்துறை அப்பீல் உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்-ஹைகோர்ட் மீது அதிருப்தி!
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதும் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக, அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் எஸ்பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனைகள் நடத்தினர். இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

எஸ்பி வேலுமணி வழக்கு
இந்த வழக்கில் தம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி வேலுமணி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க வேண்டும் என்ற லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், வேலுமணி மனுவை விசாரணைக்கு ஏற்றது.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் வேலுமணி தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு எந்த வழக்கையும் விசாரிக்க அதிகாரம் உண்டு. மத்திய அரசு வழக்கறிஞராக இருப்பவர், தனிப்பட்ட முறையில் தனிநபர்களின் வழக்குகளை நடத்தவே கூடாதா? எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த விசாரணைகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம்; உண்மைகளின் அடிப்படையில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்றம் மீது அதிருப்தி
அத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளை கையாளும் விதம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகள் வருத்தம் அளிக்கிறது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இனி வேலுமணி மீதான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications