புல்டோசர் நடவடிக்கைக்கு ஃபுல் ஸ்டாப்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்களுக்கு சொந்தமான குடியிருப்புகளை புல்டோசர் மூலம் இடிக்கும் வழக்கும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியிருக்கிறது.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை உள்ளாட்சி நிர்வாகமே புல்டோசர் கொண்டு இடித்து அகற்றுவதே புல்டோசர் நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது. 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றபோது, இது குறித்து அறிவித்திருந்தார். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதேபோல அடுத்தடுத்த நாட்களில் பலரின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இடிக்கப்படுவது அனைத்தும் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டவரின் சொத்துக்கள்தான், என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இடிக்கப்பட்டதில் பெரும்பாலான வீடுகள் இஸ்லாமியர்களுடையதுதான். எனவே, மாநில அரசு இஸ்லாமிய குற்றவாளிகளை மையப்படுத்தி புல்டோசர் நடவடிக்கையை மேற்கொள்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பானது இந்த புல்டோசர் நடவடிக்கை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி, உ.பியில் கடந்த பிப்ரவரி மாதம் வரை 128 கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 617 பேர் பாதிக்கப்பட்டிருக்கினறனர். இடிப்பு நடந்த பகுதிகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடத்தில்தான் நடந்திருக்கிறது என்று தெரிவித்திருந்தது.
உத்தரப் பிரதேசத்தை கடந்து டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அசாம் என பாஜக ஆளும் பகுதிகளுக்கு இந்த புல்டோசர் நடவடிக்கை நீண்டது. 2022ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில், ராமநவமி ஊர்வலத்தில் கல்லெறிந்தார்கள் என்று கூறி இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. கடந்த செப்.8ம் தேதி குஜராத் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில், கல்லெறிந்தார்கள் என்று சிலரின் வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. ராமநவமி ஊர்வலத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறி டெல்லி ஜஹாங்கிபூரில் உள்ள முஸ்லீம் மக்களின் குடியிருப்புகளை இடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் கேள்வி என்னவெனில், ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே குற்றவாளி என்பதற்காக மொத்த குடும்பமே வாழும் வீட்டை எப்படி இடித்து தள்ள முடியும்? மட்டுமல்லாது ஒருவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது என்றாலே அவரது வீட்டை இடித்துவிட முடியுமா? அல்லது அவர் குற்றவாளி என்று உறுதி செய்துவிட்டால் கூட அவரது வீட்டை இடிக்க யாருக்கு இங்கு அனுமதி இருக்கிறது? என்பதுதான். இதன் அடிப்படையில் புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மாதம் இது குறித்த வழக்கு ஒன்றில், புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பளித்திருந்தார். இது அவரது கடைசி தீர்ப்பாகவும் இருந்தது.
இதனையுடுத்து புல்டோசர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று வழக்கு விசாரணை நடைப்பெற்று வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் புல்டோசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே அவரது வீடு இடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் அரசு அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவரின் வீடு இடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பாக மட்டுமே இருக்க முடியும். 15 நாட்களுக்கு முன்னர் இடிப்பது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். நோட்டீஸை எதிர்த்து வீட்டின்/சொத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தால் அதனை இடிக்க முடியாது. பொது இடங்களான சாலை, தெரு, நடைபாதை, ரயில் பாதைகளை ஒட்டிய பகுதிகள், ஆற்றங்கரை அல்லது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் மட்டுமே இடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவினரால் 'புல்டோசர் பாபா' என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அம்மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications