ஹைகோர்ட்டுக்கு போகாம ஏன் இங்க வந்தீங்க? ஹேமந்த் சோரன் வழக்கில் சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி
டெல்லி: சுரங்க முறைகேடு வழக்கில் தாம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையிடாமல் உச்சநீதிமன்றத்துக்கு நேராக வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடவும் ஹேமந்த் சோரனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை அமலாக்கத்துறையானது சுரங்க முறைகேடு ஊழல் வழக்கை முன்வைத்து அதகளப்படுத்தி வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மொத்தம் 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அண்மையில்தான் ஒரே ஒருமுறை அமலாக்கத்துறை விசாரணைக்காக ஹேமந்த் சோரன் ஆஜரானார்.

பின்னர் டெல்லி சென்ற ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சித்தது. ஆனால் டெல்லி பங்களாவில் ஹேமந்த் சோரன் இல்லை என தெரியவந்தது. ஹேமந்த் சோரனுக்காக பல மணிநேரம் காத்திருந்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தத்தளித்தது அமலாக்கத்துறை. இதனால் ஹேமந்த் சோரன் 30 மணிநேரமாக மாயமாகிவிட்டார் என தகவலும் பரவியது. ஆனால் ஹேமந்த் சோரன் ராஞ்சிக்கு காரிலேயே வந்துவிட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
ராஞ்சியில் ஹேமந்த் சோரன் இல்லத்தில் சுமார் 7 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே ஹேமந்த் சோரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராஞ்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
மேலும் ஹேமந்த் சோரன் தமது கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடாமல் ஏன் உச்சநீதிமன்றத்துக்கு வர வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை ஹேமந்த் சோரன் தரப்பு அணுக வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.












Click it and Unblock the Notifications