ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
டெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த ஆலையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அப்பகுதி மக்கள் மிக பெரிய போராட்டத்தை நடத்திய நிலையில், அப்போது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் உயிரிழப்பும் கூட ஏற்பட்டன.
அந்த ஆலையை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை ஐகோர்ட் அந்த ஆலையை மூட உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டில் அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும், ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் உரிமையாளர் வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சில பரபர வாதங்களை முன்வைத்தனர். தமிழகம் ஒன்றும் குப்பைக் கிடங்கு அல்ல என்று கூறிய அவர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி பொருத்தமான இடமில்லை என்றும் அந்த ஆலையை இயங்க அனுமதித்தால் தூத்துக்குடியில் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த தமிழக அரசு, சுற்றுச்சூழலைக் கடுமையாக மாசுபடுத்தும் தொழிற்சாலை தேவையில்லை என்றும் தெரிவித்தனர். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "எடுத்த உடன் ஒரு நிறுவனத்தை மூடக் கூடாது. அவர்கள் செய்த தவறை வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட வேண்டும். அதேநேரம் நிறுவனங்களும் தவறை சுட்டிக்காட்டினால் மட்டும் நடவடிக்கை எடுப்போம் என இருக்கக் கூடாது என்றனர்.
இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி இந்த வழக்கு மீண்டும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications